ஐஐடியில் 'மது விருந்து' வேண்டாம்-கருணாநிதி
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: சிறுதாவூர் நில அபகரிப்பை முதலில் தெரிவித்தது மார்க்சிஸ்ட் வரதராஜன் தான் எனக் குறிப்பிட்டதை அவர் 'ஏகடியம்' என கூறியுள்ளாரே?.
பதில்: எல்லா நிலைகளிலும் அவர் போன்றோரிடம் மரியாதையும், மதிப்பும் வைத்திருப்பவன் நான். மீண்டும் ஒரு முறை நான் எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்த்தால் அந்த உண்மை புரியும்.
கேள்வி: பயங்கரவாதத்தை ஒடுக்க லோக்சபாவில் கொண்டு வரப்பட்டுள்ள இரண்டு மசோதாக்களைப் பற்றி?
பதில்: இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எந்த வகையிலும் ஊறு நேராவண்ணமும், மாநில உரிமைகளில் குறுக்கிடாத முறையிலும், தனிமனித சுதந்திரத்தைக் காயப்படுத்தாத வகையிலும் அவை அமைய வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது.
கேள்வி: சென்னை ஐஐடியில் நடக்கவுள்ள விழாவில் மது விருந்து நிகழ்ச்சி பற்றி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளாரே?
பதில்: அவரது ஆதங்கம் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. கல்வி நிலையங்கள் அதிலும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்கள் ஒழுக்கம், பண்பாட்டின் உறைவிடமாகவும், கலாசாரப் பாரம்பரியத்தை இளைஞர்களுக்குக் கற்றுத் தருவதோடு, பேணிக் காக்கும் பீடமாகவும் திகழ்ந்திட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியை தவிர்த்து விடுவர் என எதிர்பார்க்கிறேன்.
(பல்வேறு ஐஐடி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் PAN-IIT என்ற நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதையொட்டி காக்டெயில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை ராமதாஸ் மிகக் கடுமையாக கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது)
கேள்வி: சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இந்திய தொழில் நுட்பகல்வி நிறுவனங்களை (ஐ.ஐ.டி) விட முன்னணியில் இருப்பதாக செய்தி வந்துள்ளதே?
பதில்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி ஆவணங்களை வெளியிடுவதில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை விட, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வேகமாக வளர்ந்து வருவதாக செய்தி வந்துள்ளது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. இந்த உயர்ந்த நிலையை எட்டிப் பிடித்துள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அதை தக்க வைத்துக் கொண்டு மேலும் உயர விரும்புகிறேன். இந்த உயர்நிலையை எட்ட காரணமாக இருந்த மாணவர்களையும், துணைவேந்தர் உள்ளிட்ட பேராசிரியர்களையும் மனமாரப்பாராட்டுகிறேன்.
கேள்வி: கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே?
பதில்: கால்வாயை பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைத்து உதவிய சாய்பாபா டிரஸ்ட் நிறுவனத்தார், சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைத்து தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.