கணவரை கொன்ற பெண் காதலருடன் ஓட்டம்
சென்னை டி.பி.சத்திரம் மெயின்ரோடு 756 பிளாக்கை சேர்ந்தவர் தணிக்கைராஜ் பிரவீன் (30). இவர் வாடகை கார் டிரைவராக இருந்ததுடன், எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் பணியாற்றினார்.
பிரவீனுக்கும் பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த ஆங்கிலோ இந்திய பெண்ணான நிக்கோல் என்கிற நிக்கோலா (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு பிரிட்னி, நிக்வின், ஆன்ரியா என்ற 3 குழந்தைகள் பிறந்தன.
அழகிய பெண்ணான நிக்கோலா, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவார். இதனால் அவருக்கு கால் சென்டர் ஒன்றில் வேலை கிடைத்தது.
ஆங்கிலோ இந்தியப் பெண் என்பதால் ஆங்கிலேய கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்தார் நிக்கோலா. மது, சிகரெட், ஆண் நண்பர்கள் பழக்கம் என சகல பழக்கங்களும் அவரிடம் இருந்தன.
சைதாப்பேட்டையி்ல் அவரது அலுவலகம் இருந்தது. இதனால் அவர் போய் வருவதற்காக மாத வாடகைக்கு ஆட்டோ ஒன்றை அமர்த்திக் கொடுத்திருந்தார் பிரவீன்.
ஆனால் அதுவே அவருக்கு வினையாகி விட்டது. ஆட்டோ டிரைவரான மணிமாறனுக்கும், நிக்கோலாவுக்கும் இடையே கள்ளக் காதல் பூத்தது.
இது பிரவீனுக்குத் தெரிய வந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மனைவியைக் கண்டித்தார்.
இதனால் நிக்கோலா கோபித்துக்கொண்டு, குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு ஆட்டோ டிரைவர் மணிமாறனுடன் ஓடி விட்டார்.
இதையடுத்து பிரவீன் தனது மனைவியை மீட்டுத்தரும்படி போலீசில் புகார் செய்தார். போலீசாரும் நிக்கோலாவை மீட்டு பிரவீனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பிரவீன், மனைவி குழந்தைகளுடன் டி.பி. சத்திரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் குடியேறினார்.
கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய நிக்கோலா கள்ளக்காதலன் மணிமாறனுடன் மாதவரத்தில் குடும்பம் நடத்த தொடங்கினார்.
மனைவியை மீட்டுத் தரக்கோரி மீண்டும் டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்திலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பிரவீன் புகார் செய்தார்.
அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினையில் போலீசார் தலையிட்டு, நிக்கோலாவை அழைத்து பேசினர். இதில் சமாதானம் அடைந்த நிக்கோலா கணவர் பிரவீனுடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் நிக்கோலா, மீண்டும் பிரவீனுடன் சேர்ந்தார். டி.பி.சத்திரத்தில் உள்ள வீடு, வசதி குறைவாக இருந்ததால், வேறு வீடு கிடைக்கும் வரை லாட்ஜில் தங்கலாம் என்று நிக்கோலா, பிரவீனுக்கு யோசனை தெரிவித்தார்.
மனைவி சொன்னதை நம்பிய பிரவீன் சரி என்று ஒத்துக் கொண்டார். 10 நாட்களுக்கு முன்பு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரவீன், பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கினார்.
இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் மாலை நிக்கோலா, லாட்ஜ் அறையில் இருந்து பதறியபடி வெளியே ஓடிவந்தார். அவரது கையில் ரத்தக்கறை படிந்திருந்தது.
லாட்ஜ் மேனேஜர் பதறிப் போய் அறையில் பார்த்தபோது பிரவீன் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார்.
அவரது நெஞ்சில் உடைந்த கண்ணாடியால் குத்தப்பட்டிருந்தது.
மூன்று குழந்தைகளும் அவரைச்சுற்றி அழுதபடி நின்றனர். பெற்றோர், நண்பர்களின் பேச்சைக் கேட்காமல், எந்த மனைவி தன்னுடன் வாழ வேண்டும் என்று பிரவீன் ஆசைப்பட்டாரோ, அவரே நெஞ்சில் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நிக்கோலா கையில் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
கொலையில்,நிக்கோலாவின் கள்ளக்காதலன் மணிமாறனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிரவீனை கொலை செய்தபோது, அதை நேரில் பார்த்த அவரது குழந்தைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூரில் உள்ள ஆட்டோ டிரைவர் மணிமாறன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு மணிமாறன் இல்லை. தலைமறைவாகிவிட்டார்.
அதைத் தொடர்ந்து மணிமாறனின் தாயார் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிக்கோலாவின் தந்தை பிளாடியிடமும் விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள நிக்கோலாவையும், மணிமாறனையும் பிடிக்க 2 தனிப்படை போலீசார் இறங்கியுள்ளனர்.
விரைவில் இருவரும் பிடிபடுவார்கள் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.