அதிமுக எம்.எல்.ஏ சந்திரா தகுதியிழப்புக்கு இடைக்காலத் தடை
ராஜபாளையம்: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதி மன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜபாளையம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் வி.பி.ராஜன் 57,827 வாக்குகள் பெற்றார்.
அத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த தங்கமுத்து என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், சந்திரா கிறிஸ்தவ பள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் தன்னை இந்து பள்ளர் என்று கூறி போலியான ஆதாரங்களை சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தங்கமுத்து தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.நாகப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது தீர்ப்பில், சந்திரா போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தனது மதத்தையும், படிப்பையும் மாற்றிக் கொடுத்திருப்பதாக கூறி அவரது வெற்றி செல்லாது என்று கடந்த 2 -ம் தேதி தீர்ப்பளித்தார்.
எனினும் சந்திரா 3 வார காலத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கூறி அந்த தீர்ப்பை அவர் நிறுத்தி வைத்தார்.
இதன்படி சந்திரா உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அவரது மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பாண்டா, சுதர்சன் ரெட்டி ஆகியோர் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் நீதிபதிகள் தங்களது உத்தரவில், சந்திராவின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக் காலத் தடை விதித்தார்கள்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் ஆறு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.