தாஜ், டிரைடென்ட் ஹோட்டல்கள் மீண்டும் திறப்பு
நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிராவதத் தாக்குதலில் தாஜ் மஹால் ஹோட்டலும், அதை ஒட்டியுள்ள தாஜ் டவர் பிரிவும் கடும் சேதமடைந்தன.
அதேபோல ஓபராய் குழுமத்தைச் சேர்ந்த ஓபராய் மற்றும் டிரைடென்ட் ஹோட்டல்களும் சேதமடைந்தன.
இதில் தாஜ் மஹால் ஹோட்டலும், டிரைடென்ட் ஹோட்டலும் சீரமைக்கப்பட்டு விட்டது. நேற்று மாலை இவை இரண்டும் திறக்கப்பட்டன.
இரு ஹோட்டல்களிலும் தங்க எத்தனை பேர் புக் செய்துள்ளனர் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தாஜ் ஹோட்டல் தனது டவர் பிரிவில் 268 அறைகளைத் திறந்துள்ளது. இவற்றில் 9 சூட்கள் ஆகும்.
அதேபோல, டிரைடென்ட் ஹோட்டல் 550 அறைகள் மற்றும் சூட்களைத் திறந்துள்ளது.
தாஜ் ஹோட்டல் விழாக் கால சலுகையாக 15 சதவீத தள்ளுபடிக் கட்டணத்தை அறிவித்துள்ளது. டிரைடென்ட் இதுபோன்ற சலுகை எதையும் அறிவிக்கவில்லை.
தாஜ் ஹோட்டல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள், விருந்தினர்கள் பங்கேற்றனர்.
இரு ஹோட்டல்களிலும் பாதுகாப்பு அதி நவீனப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதத் தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடைபெற்றால் அதை சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாக தாஜ் ஹோட்டல் உரிமையாளரான ரத்தன் டாடா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை இரு ஹோட்டல்களின் நிர்வாகத்தினரும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை இரு ஹோட்டல்களும் ரத்து செய்துள்ளன.
மும்பை நகரம் இன்னும் துக்கத்திலிருந்து விலகவில்லை. அனைவரின் மனதிலும் தீவிரவாதத் தாக்குதலின் நிழல் இன்னும் படிந்துள்ளது. இந்த நிலையில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என டிரைடென்ட் ஹோட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஓபராய் ஹோட்டலையும், தாஜ் ஹோட்டலின் இன்னொரு பகுதியையும் விரைவில் சீரமைத்து அவற்றையும் திறக்க இரு ஹோட்டல் நிர்வாகங்களும் தீவிரமாக உள்ளன.