தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சென்னை: தமிழகத்தில் இன்று 70 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி சென்னையில் முகாமைத் தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் ஒட்டுமொத்த போலியோ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இன்று தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்து 399 மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணை சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, குழந்தைக்கு சொட்டு மருந்து அளித்து தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், கோயில்கள், சுற்றுலா மையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டன. நடமாடும் சிறப்பு மையங்களும் செயல்பட்டன.
சென்னையில் 1126 மையங்கள் அமைக்கப்பட்டு ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
மேயர் மா.சுப்பிரமணியன் ராயப்பேட்டை மாநகராட்சி நலவாழ்வு மையத்தில் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, மன்ற உறுப்பினர் துரை மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கலெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போலியோ முகாம்களைத் தொடங்கி வைத்தனர்.