விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: காங்.
சென்னையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுக்கு இடையே திடீர் மோதல் மூண்டது.
3 தரப்பையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.
காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் சுதர்சனம் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகளை, யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும். இது பெரியார் திராவிட கழகமாக இருந்தாலும் சரி, விடுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அந்தக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டோம்.
அவர்களுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. சத்தியமூர்த்தி பவனில் தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்றார்.
ஜி.கே.வாசன் எச்சரிக்கை
மத்திய புள்ளியியல் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில், வன்முறையை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைப்பவர்களை அடக்குவோம், ஒடுக்குவோம். சத்தியமூர்த்தி பவனில் நடந்த விரும்பத்தகாத செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானு. இந்த சம்பவம் குறித்த உண்மமை நிலையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் வாசன்.
திருமாவளவனை கைது செய்க - இளங்கோவன்:
இதற்கிடையே, சத்தியமூர்த்தி பவனைத் தாக்கியது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஈரோட்டில் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்துவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது உள்ளிட்டவற்றுக்காகவே திருமாவளவன் கட்சி நடத்தி வருகிறார்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீஸாருக்கு உள்ளது. ஆனால் சமீப காலமாக அவர்கள் காட்சிப் பொருளாகி விட்டனர்.
மதுரையில் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டபோதும் அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னையில் சட்டக் கல்லூரியில் மாணவர்களை தாக்கியபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் உடனடியாக சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதை எப்படி சீரமைப்பது என்பது குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டியிருக்கும் என்றார் இளங்கோவன்.
தாக்கியவர்களை கைது செய்க - ப.சிதம்பரம்:
சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை தயவு தாட்சன்யமின்றி போலீஸார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கோரிக்கை விடுத்துள்ளார்.