பாக். தப்ப முடியாது-இந்தியா எதற்கும் தயார்: பிரணாப்
டெல்லியில், பல்வேறு நாடுகளின் இந்திய தூதர்களின் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது.
120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வரும் இந்திய தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். நாளை பிரதமர் மன்மோகன் சிங் உரை நிகழ்த்தவுள்ளார்.
மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் நிலவும் உறவு, ஏற்பட்டுள்ள சூழ்நிலை, தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்திய தூதர்களுக்கு இரு தலைவர்களும் விளக்கவுள்ளனர்.
இது தவிர மும்பை தாக்குதல், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு, இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதட்டம் போன்றவை குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், தீவிரவாதம், தீவிரவாதிகள், தீவிரவாத முகாம்கள் ஒழிப்பு குறித்து பாகிஸ்தான் பல உறுதிமொழிகளை அளித்துள்ளது. அவற்றை அது நிறைவேற்றியே ஆக வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.
என்ன உறுதிமொழியையெல்லாம் பாகிஸ்தான் கொடுத்ததோ அதை அது நிறைவேற்றியாக வேண்டும். அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். சர்வதேச சமுதாயத்தில் பொறுப்பான ஒரு நாடு தனது கடமையிலிருந்து தவற முடியாது.
நமது மக்கள் பலரின் உயிர் பறிபோயுள்ளது. பெருமளவிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. எனவே பாகிஸ்தான் கண்டிப்பாக செயல்பட்டாக வேண்டும். அதிலிருந்து தப்புவதை அனுமதிக்க முடியாது.
ராணுவத் தாக்குதல் உண்டா?
இந்தியா எதற்கும் தயாராக உள்ளது. ராணுவத் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லி விட்டுச் செய்ய முடியாது.
அதை பத்திரிக்கையாளர்களிடம் சொல்லி விட்டுச் செய்ய முடியாது. அப்படிச் செய்வது ராணுவ நடவடிக்கை அல்ல. அரசு அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலனையில் வைத்துள்ளது என்றார் முகர்ஜி.