அடுத்த முதல்வர் என்று கூற தகுதி வேண்டும்-பொன்முடி
தூத்துக்குடி: நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் 2011ல் நாங்கள் தான் முதல்வர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
தூத்துக்குடி காந்தி சிலை முன் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. அதில், பொன்முடி பேசுகையில்,
நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் 2011ல் நாங்கள் தான் முதல்வர்கள் என்று கூறுகிறார்கள். இது ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் கூறுவதற்கு உரிமை உண்டு. ஆனால் எல்லாவற்றிக்கும் ஒரு தகுதி வேண்டும்.
40 எம்பி தொகுதிகளில் ஜெயலலிதா நிற்க வேண்டும் என்பதற்காக அவரது கட்சியினர் பணம் கட்டி வருகின்றனர். இது அவர்கள் சேர்த்து வைத்துள்ள கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக்கும் முயற்சி தான்.
கடவுளின் பெயரால் சேது சமுத்திர திட்டம் தடைப்பட்டுள்ளது. மனிதனின் நம்பிக்கை முன்னேற்றத்திற்கான தடைக்கல்லாக இருக்கக் கூடாது.
85 வயதிலும் மக்களுக்காக 20 வயது இளைஞர்போல் உழைத்து வருகிறார் முதல்வர் கருணாநிதி. அரசியல் எதிரிகளையும் மதித்து பதிலளித்து வருகிறார் என்றார்.
விரைவில் 2000 ஆசிரியர்கள் நியமனம்
பின்னர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது புகார்கள் வந்தால் அது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலைக்கழகங்கள், மற்றும் அரசு கல்லூரிகளில் விரைவில் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார்.