மது விலக்கு: கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு
டாக்டர் ராமதாஸ் தலைமையில் மதத் தலைவர்கள், தொண்டு நிறுவனத்தினர், காந்தீய சிந்தனையாளர்கள் ஆகியோர் உள்ளிட்ட 42 அமைப்புகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி நடத்தது.
அதில் தமிழ்நாட்டில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், வரும் தை மாதம் முதல் மதுக்கடைகளை மூட வேண்டும், இல்லையென்றால் பிப்ரவரி மாதம் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மான நகலை இன்று முதல்வர் கருணாநிதியிடம் ராமதாஸ் தலைமையில் வந்து அவர்கள் வழங்கினர்.
முதல்வரை சந்தித்த இந்தக் குழுவில் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கோவை போரூர் ஆதீனம், மருதாச்சல அடிகளார், சென்னை கத்தோலிக்க பேராயர் சின்னப்பா, திருவாவடுதுறை ஆதீனம் முத்துக்குமாரசாமி தம்பிரான்,
சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை தலைவர் சேக் அப்துல்லா ஜமாலி, ஜெயின் சங்கத் தலைவர் மோகன்லால் ஜெயின், காந்திய அமைப்புச் சேர்ந்த லட்மிகாந்தன், அகில இந்திய தேவர் பேரவையின் ராமகிருஷ்ணன், நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
முதல்வரை கோட்டையில் சந்தித்து இந்த தீர்மாத்தை அளித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
மது எல்லாவிதமான பாவங்களுக்கும் காரணமாக அமைகிறது. மது பழக்கத்தால் இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகிறது. சாலை விபத்துக்கள் அதிகமாகின்றன.
9ம் வகுப்பு மாணவர்களே வகுப்பறையில் மது குடிக்கிறார்கள். நிலைமை இப்படியே போனால் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைவரும் குடிகாரர்களாகி விடுவார்கள்.
எனவே தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை கொண்டு வந்து இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்று முதல்வரை வற்புறுத்தினோம்.
பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் ரூ. 2,000 கோடி வருமானத்தை பொருட்படுத்தாமல் குமாரசாமி மது விலக்கை கொண்டு வர தயாராக இருந்தார். அங்கு தற்போதுள்ள முதல்வரும் பூரண மது விலக்கை கொண்டு வருவோம் என்று உறுதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மது விலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்தார். அதற்கு என்னுடன் வந்த தலைவர்கள், கிராமங்களிலும் மற்ற பகுதிகளிலும் கள்ளச் சாராயம் வராமல் பார்த்து கொள்வோம் என்று உறுதியளித்தனர்.
இதை கவனமாகக் கேட்ட முதல்வர், உடனடியாக மது விலக்கை அமல்படுத்துவது சாத்தியமல்ல. படிப்படியாக மது விலக்கை கொண்டு வர ஆயத்தமாகிறோம் என்று உறுதியளித்தார்.
என்னுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக சொல்லி இருக்கிறார் என்றார் ராமதாஸ்.