70 ஆண்டுகளில் டொயோட்டாவுக்கு முதல் நஷ்டம்!
கார் உற்பத்திக்கு நிகராக இல்லாமல் விற்பனையில் சரிவு ஏற்பட்டதே, இந்த நஷ்டத்துக்குக் காரணம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நஷ்டத்தால் டொயோட்டா கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், ஒரு சாதனையையும் இந்த ஆண்டு ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகில் முதலிடம் பெற்ற நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ்தான். ஆனால் 2008ம் ஆண்டைப் பொறுத்தவரை, அதிக கார்களை விற்று சாதனைப் படைத்திருப்பது டொயோட்டாதான். கடந்த 9 மாதங்களில் 7.05 மில்லியன் கார்களையும், ஜெனரல் மோட்டார்ஸ் 6.66 மில்லியன் கார்களையும் விற்றுள்ளன.
இந்த நிறுவனத்தின் இன்னொரு சாதனை, இத்தனை நெருக்கடியிலும் எந்த ஊழியரையும் வேலையை விட்டு அனுப்பாமல் பார்த்துக் கொண்டதுதான். ஆனால் ஜெனரல் மோட்டார்ஸில் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1 லட்சம் பணியாளர்களுக்கும் மேல் நீக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச நிதி நெருக்கடி டொயோட்டாவுக்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை ஏற்படுத்தியுள்ளது. வரப்போகிற ஆண்டுகள் மிக மோசமானதாக இருக்கும். ஆனால் இதை சிக்கனமாக, திறமையோடு சமாளித்தாக வேண்டும் என டொயோட்டா நிறுவனத் தலைவர் கட்சோகி வாட்டனபே கூறியுள்ளார்.
டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு 25.26 பில்லியன் டாலர் லாபம் சம்பாதித்தது. ஆனால் இந்த ஆண்டு 1.66 பில்லியன் டாலர் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது.
ஜப்பானின் மற்றொரு பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவும் இந்த ஆண்டு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.