திருச்சியில் இளம்பெண் கடத்தல்
திருச்சி: துபாயில் பணிபுரிந்து வரும் திருச்சியைச் சேர்ந்த அஷ்ரஃப் அலி என்பவரின் 19 வயது மகள் ஹயாத்துன்னிசா திருச்சியில் கடத்தப்பட்டார். அவரை மீட்டுத் தர உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளளனர்
இதன் விபரம் வருமாறு:
திருச்சியைச் சேர்ந்த அஷ்ரஃப் அலி கடந்த பத்து ஆண்டுகளாக துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஹயாத்துன்னிசாவுக்கு கடந்த ஜுன் மாதம் நஜிருத்தீன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடைபெற்ற ஒரு மாதம் கழித்து இவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க பாஸ்போர்ட் அலுவலகம் சென்றுள்ளனர். இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பாஸ்போர்ட் அலுவலகம் அருகேயுள்ள ஏஜெண்ட் வரகனேரியைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவரிடம் சென்றுள்ளனர்.
அப்பொழுது ஹயத்துன்னிசாவின் முகவரியையும், தொலைபேசியையும் குறித்துக் கொண்டுள்ளார் அபுதாஹிர்.
இதைத் தொடர்ந்து நஜிருத்தீன் பணிக்காக துபாய் வந்தவுடன் அவரது மனைவி ஹயாத்துன்னிசாவை தொலைபேசி மூலம் அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார் அபுதாஹிர். காவல்துறையில் புகார் கொடுத்து விடுவோம் என்று கூறியதும் சில நாட்கள் தொடர்பு கொள்வதை நிறுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் 9ம் தேதி ஹயத்துன்னிசா தென்னூரில் உள்ள கணவர் வீட்டிலிருந்து தில்லைநகரில் உள்ள தாயார் வீட்டிற்குச் சென்றபோது அவரை அபுதாஹிர் கடத்தியுள்ளார்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அபுதாஹிரை போலீஸார் விசாரித்தபோது, அருண் என்ற ரவுடியிடம் பணத்துக்காக அவரை விற்று விட்டதாக கூறியுள்ளார்.
அருண் மீது பல கடத்தல், மோசடி, கொலை, கொள்ளை புகார்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவரிடமிருந்து தனது மகளை மீட்டுத் தர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் காணாமல் போன பெண்ணின் தந்தை அஷ்ரஃப் அலி.
ஹயத்துன்னிசா குறித்த தகவல் தெரிந்தோர் திருச்சி செல்: 9442660374 அல்லது துபாய் செல்: 00971 50 7955118க்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கோரப்பட்டுள்ளது.