புதுச்சேரி 'ரகளை' போலீஸ் மீது மத்திய-மாநில அரசுகள் அதிரடி
போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரின் பெயர், விவரத்தை தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து 2 எஸ்ஐகள், 10 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 2 ஹோம் கார்டுகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போலீசார் மீண்டும் ஏதாவது ரகளையில் ஈடுபட்டால் அதை சமாளிக்க சி.ஆர்.பி.எப் அதிரடிபடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வாலிபரை கைது செய்யாமல் இருக்க அவரிடம் உருளையன்பேட்டை போலிஸ் எஸ்.ஐ. ஸ்ரீதர் ரூ. 5,000 லஞ்சம் கேட்டார். இந்த எஸ்.ஐக்கு ஏஜண்டாக அம்பலவாணன் என்ற வக்கீல் செயல்பட்டார். இந்த இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வக்கீல் அம்பலவாணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எஸ்.ஐ ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த காவல் துறையினர் கோர்ட்டு வளாகத்தில் திரண்டனர். நீதிபதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போக்குவரத்துப்பிரிவு, எல்லைக்காவல் என அனைத்து காவலர்களும் குடும்பத்துடன் திரண்டுவிட்டனர். அருகில் இருந்த காவல் நிலையங்கள் சிலவற்றைப் பூட்டிவிட்டு காவலர்கள் வந்துவிட்டனர்.
செய்தி சேகரிக்க சென்ற கேமராமேன்கள், தொலைக்காட்சிக்காரர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்தனர். இதில் காயமடைந்த மூன்று பத்திரிகையாளர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரின் குடும்பங்களுக்குத் தகவல் பறந்ததும் அவர்கள் புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கோர்ட்டு வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது. லஞ்சம் வாங்கிய எஸ்.ஐக்கு ஜாமீன் வழங்கிய பிறகே புதுச்சேரி தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா நீதிமன்றத்தை விட்டு வெளியே வர முடிந்தது.
இது தொடர்பாக நீதிபதி கிருஷ்ணராஜா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகோபாத்யாயாவுக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்திய புதுச்சேரி போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
போலீசார் நடத்திய ரகளை தொடர்பாக புதுச்சேரி தலைமைச் செயலாளர் ஜனவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் ராகேஷ் சந்திரா, எஸ்பிக்கள் ஸ்ரீகாந்த், மனிஷ்குமார் அகர்வால் ஆகியோர் இது குறித்து விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தர்ணாவில் ஈடுபட்ட போலீசாரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இது குறித்து தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா சீலிட்ட உறையில் தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் நியமிக்கப்படுகிறார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
2 எஸ்ஐ, 10 போலீசார் சஸ்பெண்ட்:
இதனையடுத்து புதுவை காவல்துறை தானாகவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் (வில்லியனூர்), ராஜ்குமார் (சிக்மா செக்யூரிட்டி) மற்றும் 8 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
2 ஹோம் கார்டுகள் பணி நீக்கம்:
போலீஸ் மெஸ்சில் பணியாற்றிய ஊர்க்காவல் படைவீரர் முரளி, சட்டம் ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றிய ஊர்காவல் படைவீரர் அவில்பட்டு ஆகியோர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்) 147 (சட்டவிரோதமாக செயல்படுதல்), 341 (தடுத்தல்), உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் 3 மாதம் தங்கியிருந்து கையெழுத்து போடவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்தது டிஸ்மிஸ்...
இதற்கிடையே இந்த நடவடிக்கையால் போலீசார் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டம் 311ன் கீழ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் தேசிய விரோத செயலில் ஈடுபட்டதாக கருதி கடும் நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தயார் நிலையில் மத்தியப் படைகள்:
மேலும், போலீசார் ஏதாவது ரகளையில் ஈடுபட்டால் அதை சமாளிக்க சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப் அதிரடிபடையை உதவிக்கு அழைக்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து படையின் 4 கம்பெனி வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நிருபர்கள் மீது தாக்குதல்-விசாரணைக்கு உத்தரவு:
இதற்கிடையே புதுச்சேரி நீதிமன்றத்தில் போலீசாரால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேவநீதிதாஸ் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை புதுவை முதல்வர் வி.வைத்தியலிங்கம் தெரிவித்தார்.