சீனாவின் கலப்பட பால் பவுடர் நிறுவனம் சன் லூ திவால்
திவாலான சன் லூ நிறுவனத்தின் நிர்வாகத்தை, கோர்ட் நியமிக்கும் ரிசீவர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 6 மாதங்களில் சன் லூவின் சொத்துக்களை விற்று அதன் கடன்களை அடைக்க ரிசீவர் உதவி செய்வார்.
பால் பவுடர் விற்பனையில் முன்னணியில் இருந்த நிறுவனம் சன் லூ. ஆனால் அதன் பால் பவுடரில் மெலமைன் எனப்படும் அபாயகரமான வேதிப்பொருளை கலந்து விற்றதால், சீனாவிலும், உலக நாடுகள் பலவற்றிலும் லட்சக்கணக்கான குழந்தைகள் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டனர். சீனாவில் பல குழந்தைகள் உயிரிழந்தன.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால் சீன பால் பவுடர்களுக்கு பல நாடுகளில் தடையும் விதிக்கப்பட்டது.
இப்படி கலப்பட பால் பவுடரை விற்று பெரும் லாபம் சம்பாதித்த சன் லூ நிறுவனத்துடன், உலகின் முன்னணி பால் பொருள் ஏற்றுமதியாளரான நியூசிலாந்தின் போன்டேரா நிறுவனம் கூட்டணி வைத்திருந்தது.
சன் லூ நிறுவனத்தின் 43 சதவீத பங்குகள் போன்டேராவிடம் இருந்தது. சன் லூ நிறுவனம் சிக்கலில் மாட்டியதைத் தொடர்ந்து அந்தப் பங்குகளை விற்று விட்டது போன்டேரா.
இதையடுத்து சன் லூ திவால் நோட்டீஸ் கொடுத்தது. அந்த அறிவிப்பை சீன கோர்ட்டும் ஏற்று, சன் லூ 'போண்டி'யாகி விட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போன்டேரா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஆண்ட்ரூ பெர்ரியர் கூறுகையில், இதை நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தோம். சன் லூ மிகக் கஷ்டமான நிலையில் இருப்பதை நாங்கள் அறிந்திருந்தோம். மெலமைன் சிக்கலி்ல அவர்கள் மாட்டியதைத் தொடர்ந்து பெரும் கடன் தொல்லையி்ல் அவர்கள் மாட்டிக் கொண்டனர்.
இதன் காரணமாகவே சன் லூவில் எங்களுக்கு இருந்த பங்குகளை விற்று விடத் தீர்மானித்தோம்.
இனிமேல் சன் லூவுடன் எந்த வகையிலும் நாங்கள் உடன்பாடு வைத்துக் கொள்ள மாட்டோம்.
எங்களுக்கு சன் லூ மூலம் கசப்பான அனுபவம் கிடைத்துள்ளது. இதிலிருந்து நல்ல பாடம் கற்றுள்ளோம் என்றார் பெர்ரியர்.
மெலமைன் கலப்படத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கொடுக்க சன் லூ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவ்வளவு பணத்தைக் கொடுக்க முடியாமல்தான் திவால் நோட்டீஸை கொடுத்து விட்டது சன் லூ என்பது குறிப்பிடத்தக்கது.