அரவாணிகள் நலனுக்கு புதிய அமைப்பு
அரவாணிகள் மற்றும் நலிந்த பெண்களுக்கான 'தமிழ்நாடு தாய் விழுதுகள்' என்னும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் துவக்க விழாவில் கனிமொழி பேசுகையில்,
பெண்களும், அரவாணிகளும் சமூகத்தின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட இரு துருவங்கள். பெண்களை வீட்டில் பூட்டி வைக்கின்றனர், அரவாணிகளை வீட்டை விட்டு வெளியே துரத்தி, சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இருவரும் ஒற்றுமையாக செயல்பட இந்த அமைப்பு உதவியாய் இருக்கும். அரவாணிகள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்படுகின்றன. அவர்கள் மீது பரிவு ஏற்படும் வகையில் அவர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.
அரவாணிகள் நலனுக்காக தமிழக அரசு தனி வாரியம் அமைத்துள்ளது. அவர்கள் கல்வியறிவு பெறவும், மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறவும் சட்டபூர்வ அந்தஸ்தையும் அரசு வழங்கியுள்ளது.
தடைகளைத் தாண்டி அரவாணிகள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ளக் கூடாது.
மற்றவர்களை விட உழைப்பிலும், அறிவிலும் அரவாணிகள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்ல. சமுதாயம் தான் அவர்களுக்குரிய வாய்ப்புகளைத் தராமல் ஒதுக்கி வருகிறது.
அரவாணிகளுக்கு கல்வியறிவு தருவதன் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.