துப்பாக்கி லைசென்ஸ் லஞ்சம்-கரூர் ஆர்டிஓ கைது!
கரூர்: துப்பாக்கி லைசென்ஸ் உரிமம் வழங்க லஞ்சம் பெற்ற கரூர் ஆர்டிஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், ஆத்தூர் பெரியவடுகபட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (42). இவர் கரூரில் டெக்ஸ்டைல் மில் நடத்தி வருகிறார். வியாபாரம் விஷயமாக இவர் அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு சென்று வருவார்.
இவர் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் பெற்றிருந்தார். துப்பாக்கி உரிமம் காலாவதியான நிலையில் அதை புதுப்பித்து தருமாறு கரூர் ஆர்டிஒ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கபடவில்லை.
இந் நிலையில் இவர் கரூர் ஆர்டிஓ ஜவஹர் சாந்தகுமாரை நேரில் சந்தித்து விளக்கம் பெற சென்றார். அப்போது துப்பாக்கி லைசென்ஸ் உரிமம் புதுப்பித்துத் தர ரூ.6000 லஞ்சம் தர வேண்டும் என்று ஆர்டிஓவின் உதவியாளர் கூறியுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத செல்வகுமார் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணம் ரூ.6,000யைஐ செல்வகுமாரிடம் கொடுத்தனுப்பினர்.
செல்வகுமார் லஞ்ச பணத்தை கரூர் ஆர்டிஒவிடம் கொடுத்த போது அருகில் மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கரூர் ஜவஹர் சாந்தகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.