5 சுயேச்சைகள் மனு தள்ளுபடி, 'டம்மி'களுக்கு எச்சரிக்கை
மதுரை: திருமங்கலம் சட்டசபை இடைத் தேர்தலில் மனுத் தாக்கல் செய்த 36 பேரில் 5 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் லதாஅதியமான் (திமுக), முத்துராமலிங்கம் (அதிமுக), தனபாண்டியன் (தேமுதிக), பத்மநாபன் (அஇசமக) உள்பட 31 வேட்பாளர்கள் களத்தில் எஞ்சியுள்ளனர்.
வரும் ஜனவரி 9ம் தேதி இங்கு வாக்குப் பதிவு நடக்கிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மதுரையில் உள்ள நிலசீர்திருத்த உதவி கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் 5 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் சசிகுமார் என்பவரின் மனுவில் அவரது பெயர் எந்த தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை.
தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் போட்டியிடும் நடிகர் பரதனுக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த சக்கரவர்த்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. மேலும் அவரது மனுவில் முன்மொழிந்தவரின் கையெழுத்தும் இல்லை.
ஜான்செல்வராஜ் என்பவரின் மனுவில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதற்கான சான்றிதழும், அவரை முன்மொழிந்தவரின் கையெழுத்தும் இல்லை.
சட்டசபை தேர்தலில் போட்டியிட 25 வயது பூர்த்தியாகி இருக்கவேண்டும். ஆனால் திருப்பதி என்பவருக்கு 24 வயதே என்பதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் விருதுநகரைச் சேர்ந்த பால்பாண்டிக்கும் 25 வயது பூர்த்தியாகவில்லை.
இந்த 5 பேரின் மனுவை தவிர மற்ற 31 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற 26ம் தேதி கடைசி நாளாகும்.
அடுத்த வேட்பாளருக்காக பிரசாரம் செய்தால்...
இந் நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள உத்தரவி்ல்,
ஒவ்வொரு வேட்பாளரும் மேற்கொள்ளும் செலவை தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனிக்கும். சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் டம்மி' வேட்பாளராக நிறுத்தப்பட்டு, அந்தக் கட்சியின் உண்மையான வேட்பாளருக்காக இந்த டம்மிகள்' ஓட்டு கேட்கும் நிலை பற்றியும் தேர்தல் கமிஷன் தகவல் அளித்துள்ளது.
அந்தக் கட்சிக்கு அனுமதிக்கப்பட்ட தேர்தல் செலவு உச்சவரம்பை மீறி செலவு செய்யவும், உண்மையாக செய்த செலவுகளை மறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் மோசடி வேலை இது.
எனவே ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுக்காக பிரசாரம் மேற்கொள்கிறார்களா? அல்லது வேறு யாருக்காவது பிரசாரம் செய்கிறார்களா? என்பதை கவனத்துடன் ஆராய்வோம். வேறு கட்சி வேட்பாளருக்காக எந்த வேட்பாளராவது பிரசாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டு அவருக்கான வாகன அனுமதி ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விதிமுறை மீறல்-கட்சிகள் மீது 25 வழக்குகள்:
இதற்கிடையே தேர்தல் விதிமுறைகளை மீறிய கட்சிகள் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பேனர் வைத்தது, போக்குவரத்திற்கு இடையூராக கொடிகள் கட்டியது, அரசு சுவர்களில் விளம்பரம் செய்தது போன்ற தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதற்காக திமுகவினர் மீது 10, அதிமுகவினர் மீது 5, தேமுதிக வினர் மீது 5, மூ.மூ.கவினர் மீது 3, ல.திமுக மீது 1, அ.இ.ச.ம.க மீது 1 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறை மீறலில் ஆளும் திமுக 'முன்னிலை' வகிக்கிறது.