ஆக்ஷனுக்கு தயாராகிறது விமானப்படை - ரோந்து ஒத்திகை
டெல்லி: பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்துள்ள கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கும் வகையில், இந்திய வி்மானப்படை முழு ஆயத்த நிலையில் உள்ளது. தலைநகர் டெல்லியைக் காக்க, மிக்29 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா தாக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்நாட்டு விமானப்படை விமானங்கள் முக்கிய நகரங்கள் மீது அடிக்கடி பறந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுடனான மேற்கு எல்லைப் பகுதி விமான தளங்களில் போர் விமானங்களை விமானப்படை நிறுத்தியுள்ளது.
எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களையும் அது குவிக்க ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், சத்தமே போடாமல் ஆயத்த நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகிறது.
தலைநகர் டெல்லிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக அதை முறியடிக்கும் வகையில் டெல்லிக்கு அருகே உள்ள ஹின்டன் விமான தளத்தில் மிக் 29 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர மேற்கு பிராந்தியத்தில் உள்ள விமான தளங்களிலும் தாக்குதல் நடத்தும் வகையில் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
5000 இலக்குகள் ...
தாக்குதல் நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய விமானப்படை செய்து முடித்து விட்டதாம்.
இதுகுறித்து இந்திய விமானப்படையின் மேற்குப் பிராந்திய தலைமை கமாண்டர் ஏர் மார்ஷல் பி.கே.பார்போரா கூறுகையில், உலகின் 4வது பெரிய விமானப்படை இந்திய விமானப்படை. நமது பலத்துக்கு முன்பு பாகிஸ்தான் சாதாரணமானது.
நமது விமானப்படையின் பலம், தாக்குதல் திறனை பாகிஸ்தான் நன்கு அறியும். எனவேதான் அது பயப்படுகிறது.
விமானப்படைக்கு தாக்குதல் கட்டளை கிடைத்தவுடன் தாக்குதல் நடத்தும் வகையில், ஆயத்த நிலையில் விமானப்படை உள்ளது.
5 மணி நேரத்திற்குள் அனைத்தும் காலி ...
பாகிஸ்தானில் உள்ள 5000 இலக்குகளை நாங்கள் குறி வைத்துள்ளோம். இந்த இலக்குகளை 4 அல்லது 5 மணி நேரத்திற்குள் தாக்கி அழிப்போம்.
அதேசமயம், பாகிஸ்தானிலிருந்து நமக்கு ஆபத்து வந்தால் அந்த ஆபத்திலிருந்து 2 மணி நேரத்திற்குள் மேற்குப் பிராந்திய பகுதிகளை காப்பாற்ற முடியும் என்றார் பார்போரா.
மேற்கு பிராந்திய விமானப்படையின் எல்லை, சியாச்சின் சிகரம் முதல் முதல் ராஜஸ்தான் வரை நீண்ட, நெடிய எல்லையைக் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.