குழந்தை பலி- போலியோ சொட்டு மருந்து காரணமல்ல!
தென்காசி: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை பலியானதற்கு, சொட்டு மருந்து கொடுத்தது காரணமல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர் அருகே கரடிகுளத்தை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சீனியம்மாள்.. இவர்களுக்கு கடந்த 29.11.2008 அன்று பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் மகாலெட்சுமி. இந்த குழந்தை நேற்று திடீரென்று இறந்து விட்டது.
2 நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கியபோது குழந்தை மகாலெட்சுமிக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தது.
சொட்டு மருந்து குறித்து சில இடங்களில் வதந்தி பரவியதை தொடர்ந்து, மகாலெட்சுமியும் சொட்டு மருந்து கொடுத்ததால் தான் இறந்தாள் என்று வதந்தி பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் டாக்டர்கள் குழு கரடிகுளத்தில் விசாரணை நடத்தியது. அப்போது அந்த குழந்தைக்கு 2 நாட்களாக வயிற்றுபோக்கு இருந்தது தெரிய வந்தது.
இதற்கிடைய தென்காசி தாசில்தார் நம்மைஆழ்வார் பெருமாள் நேற்று கரடி குளம் சென்று விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வயிற்றுபோக்கு காரணமாகதான் குழந்தை மகாலெட்சுமி இறந்தது என்று டாக்டர்கள் கூறினார்கள். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு 2 நாட்கள் கழித்து குழந்தை இறந்துள்ளதால் குழந்தை மரணத்துக்கும், சொட்டு மருந்துக்கும் தொடர்பு இல்லை. மேலும் இதே ஊரில் பல குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்படடுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
ஜெயா டிவிக்கு நோட்டீஸ்:
இதற்கிடையே போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் குழந்தைகள் இறந்ததாக மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் வதந்தி பரப்பியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி ஜெயா டிவிக்கு தமிழக அரசு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஜெயா டி.வி.நிர்வாக இயக்குனருக்கு பொதுசுகாதாரத் துறை இயக்குனர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.பி.கபிலன் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ்:
தமிழ்நாட்டில் கடந்த 21-ந் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்ட குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக ஜெயா டி.வி.யில் செய்தி ஒளிபரப்பினார்கள்.
தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், தருமபுரி மாவட்டங்களில் பல குழந்தைகள் வாந்தி எடுத்ததாகவும் பொய் செய்தி பரப்பப்பட்டது. இந்த வதந்தி, காட்டுத் தீ போல மற்ற மாவட்டங்களுக்கும் பரவியது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பெற்றோர் தங்களது குழந்தைகளை தூக்கிக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தங்களது குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று டாக்டர்களை வற்புறுத்தினார்கள்.
இதனால், குரோம்பேட்டை, திருப்பூர், பெரம்பலூர், சேலம் ஆகிய நகரங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வந்துவிட்டது. டாக்டர்கள், மருத்துவர் அல்லாத பணியாளர்கள் மிரட்டப்பட்டனர். சில ஊழியர்கள் தாக்கப்பட்டனர்.
இதனால் 1 லட்சத்து 57 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட முடியவில்லை.
போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்ட அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள். பல்வேறு காரணங்களால் சில குழநëதைகள் இறந்துள்ளன. அதற்கும் போலியோ சொட்டு மருநëது கொடுத்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை.
குழந்தைகள் இறந்தது பற்றி அறிவியல்பூர்வமான ஆய்வு எதையும் மேற்கொள்ளாமல் பொய் செய்தியை ஒளிபரப்பியுள்ளீர்கள். எனவே, கடந்த 21-ந் தேதி ஜெயா டி.வி.சேனல்களில் பொய்யான செய்தி வெளியாகிவிட்டது என்றும், போலியோ சொட்டு மருநëது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உடனடியாக செய்தி வெளியிட வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் பொய் செய்தி ஒளிபரப்பியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க வேண்டும்.
இல்லாவிட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெயா டிவியில் திரும்பத் திரும்ப இந்த வதந்தியை செய்தி என்ற பெயரில் தொடர்ந்து ஒளிபரப்பியதால்தான் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பரிதவிப்புக்கு ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்து.
சமீப காலமாக டிவி மீடியாக்கள் கடும் கண்டனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில்,மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆங்கில டிவி சானல்கள் போட்டி போட்டுக் கொண்டு நேரடியாக ஒளிபரப்பு செய்து பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவு, போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட சம்பவத்தை பெரும் வதந்தியாக மாற்றி விட்ட ஜெயா டிவியும் தற்போது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.