உடல் தானம்: சென்னை கொண்டு வரப்பட்ட சிறுவன்
சேலம்: ஆசிரியர்கள் அடித்ததால் மூளைச் சாவு ஏற்பட்ட மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்த அவனது பெற்றோர், மகனுடன் சென்னை வந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பூசாரிபட்டி காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கீதா. இவரது மகன் நாஞ்சில் வளவன் (8). கணவர் இளங்கோவனைவிட்டு பிரிந்த கீதா, மகன் நாஞ்சில்வளவனுடன் பெற்றோருடன் வசித்து வந்தார்.
நாஞ்சில்வளவன் அந்த பகுதியில் உள்ள மவுண்ட் சேர்வராய்ஸ் என்ற பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
2 நாட்களுக்கு முன்பு நாஞ்சில் வளவனை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் அடிப்பதாக கூறியதை தொடர்ந்து, கீதா அவனை சமாதானம் செய்து அழைத்துச்சென்று பள்ளி முதல்வரிடம் விட்டுவிட்டு விவரத்தை சொல்லிவிட்டு வந்தார்.
சற்றுநேரத்தில் நாஞ்சில் வளவன் தலையில் பலத்த காயத்துடன் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக கீதாவுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கீதாவும் அவரது உறவினர்களும் அங்கு விரைந்து சென்று நாஞ்சில் வளவனை பார்த்து கதறி அழுதனர்.
ஆசிரியர்கள் தாக்கியதால்தான் மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டது என்று கூறி, கீதா மற்றும் அவரது உறவினர்கள், பள்ளிக்கூடம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் நாஞ்சில் வளவன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், அவன் இறக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் அவன் மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மூளைச் சாவு ஏற்பட்டதால் வளவன் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. அவனது உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து வளவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவனது உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதுபற்றி வளவனின் தாய் கீதா, தாத்தா ராமன் ஆகியோர் கூறுகையில், ஆசிரியர் தாக்கியதால் தான், நாஞ்சில் வளவன் படுகாயம் அடைந்தான். அதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மூளை சாவு ஏற்பட்ட நாஞ்சில் வளவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதனால் பலர் வாழ முடியும். அவர்களின் உருவில் இவன் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழ்ந்து விடுவோம் என்றனர்.
பின்னர் நாஞ்சில் வளவனின் உடலை தானம் செய்ய சென்னை மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை 4.15 மணி அளவில் மருத்துவ குழுவுடன் அவன் ஆம்புலன்சில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வரப்பட்டான்.