50,000 ஐடி வேலைகளுக்கு ஆபத்து
பெங்களூர்: ஐடி சார் தொழில் யூனியனின் கணக்குப்படி வரும் ஜனவரி மாதத்திற்குள் 50,000 பிபிஓ மற்றும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் வேலை இழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருகி வரும் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஐடி சார் தொழில் யூனியன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் கார்த்திக் சேகர் கூறுகையில், ஐடி மற்றும் பிபிஓ துறைகளில் அடுத்த ஆறு மாதங்களில் 50,000 பேர் வேலை இழப்பார்கள்.
இந்த ஆண்டு நடுத்தர நிறுவனங்கள்தான் முதன் முதலில் பணியாளர்களை வேலைநீக்கம் செய்ய ஆரம்பித்தது.
செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டும் 10,000 பேருக்கு வேலை போனது. தற்போது பெரிய நிறுவனங்களில் ஆள் குறைப்பு தொடங்கப் போகிறது.
சிக்கலான நிலைக்குப் போகும் நிறுவனங்கள், வேலையிலிருந்து ஊழியர்களை நீக்குவதை விட ஊதியக் குறைப்பை செய்யலாம் என பரிந்துரைத்துள்ளோம்.
ஒரு ஆண்டுக்கு ஊக்கத் தொகை வெட்டு, ஊதியக் குறைப்பு ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும் மன நிலையை ஊழியர்களும் பெற வேண்டும். நிலைமை சரியான பின்னர் அவர்களுக்குரிய ஊதியத்தையும், சலுகைகளையும் அவர்கள் பெறலாம்.
கடந்த செப்டம்பர்- டிசம்பர் மாதங்களில் சரியாக வேலை பார்க்காதவர்கள்தான் பெரும்பாலும் வேலையை இழந்துள்ளனர் என்றார் அவர்.