சென்னையில் என்எஸ்ஜி மையம்-பெங்களூருக்கு இல்லை
சென்னை: முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சென்னையில் என்எஸ்ஜி கமாண்டோ படை மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: தேசிய பாதுகாப்புப் படை முகாம் ஒன்று சென்னையில் அமையும் என்று சொன்னீர்களே?
பதி்ல்: நாம் மத்திய அரசுக்கு கொடுத்த கோரிக்கையையொட்டி, தற்போது தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குனர் ஜே.கே.தத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில், முழு அளவிலான தேசியப் பாதுகாப்புப் படையின் முகாம்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மும்பை முகாம் மேற்கு மண்டலத்திற்கும், கொல்கத்தா முகாம் கிழக்கு மண்டலத்திற்கும், ஹைதராபாத் முகாம் மத்திய மண்டலத்திற்கும், சென்னை முகாம் தென் மண்டலத்திற்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேள்வி பந்தப்புளி ஆலயப் பிரவேசம் வெற்றியடைந்ததற்கு முழு முதல் காரணம், மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் தான் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: உண்மைகளை ஒப்புக் கொள்வதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை. அவர்கள் போராட்டம் நடத்தியபோது பாலபாரதி, எம்.எல்.ஏ. உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அதன் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்தது என்பது மட்டும் முழு உண்மையல்ல!. ஏனெனில் பந்தப்புளி ஆலய பிரவேசத்துக்காக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டு அன்றைக்கே விடுதலை செய்யப்பட்ட உண்மையை 'தீக்கதிர்' உள்ளிட்ட ஏடுகள் வெளியிடத் தவறிவிட்டதுதான் மனத்திற்கு சற்று சங்கடம்!.
அனைத்து சாதியினருக்கும் ஆலயங்களில் அர்ச்சனை செய்யவே உரிமையளித்து ஆணை பிறப்பித்துள்ள இந்த ஆட்சியில், ஆலயப்பிரவேசம் மட்டும் தடுக்கப்பட்டு விடுமா என்ன?
மதுரை மாவட்டத்தில், நாட்டாமங்கலம், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தில் கொட்டகச்சியேந்தல் ஆகிய ஊர்களில் பஞ்சாயத்து தேர்தலே நடத்த முடியாமல் இருந்ததை மாற்றியமைத்துப் 'புதுவிடியல்' கண்டது, 'பெரியார் நினைவு சமத்துவபுரம்' பல கண்டது எல்லாம் இந்த ஆட்சியின் புரட்சிதான் என்பது அனைவரும் அறிந்ததாயிற்றே!
கேள்வி: நீதிமன்றங்களில் பெரும் எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கியிருப்பதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவலை தெரிவித்து இருக்கிறாரே?
பதில்: தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், 'தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி' என்பது உண்மையாகிவிடும். நீதித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் மொத்தமாக ரூ. 310 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மலேசியா-மீட்கப்பட்டவர்கள் சந்திப்பு:
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டு மலேசியாவில் தத்தளிக்க விடப்பட்டு முதல்வரின் உதவியால் நாடு திரும்பிய 21 தமிழர்கள் கோட்டையில் கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அவர்களுக்கு தலா ரூ.10,000 உதவித் தொகை வழங்க கருணாநிதி உத்தரவிட்டார்.
கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு:
இதற்கிடையே தென் மண்டல என்எஸ்ஜி முகாமை பெங்களூரில் அமைக்க வேண்டும் என்ற அம் மாநில முதல்வர் எதியூரப்பாவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதையடுத்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள எதியூரப்பா, மற்ற 4 பெருநகரங்களில் மட்டும் இந்தப் படையை அமைக்க அனுமதித்துள்ளது கர்நாடகத்தைப் புறக்கணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.