இன்று சுனாமி தாக்கியதன் 4ம் ஆண்டு நினைவு நாள்
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று உலகையே உலுக்கிய மறக்க முடியாத சுனாமி வந்து போன நாள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எழுந்த சுனாமி ஆழிப் பேரலைகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை என இந்தியக் கடலோர நாடுகளை சுழற்றிப் போட்டது.
லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர்.
தமிழகம் இந்த ஆழிப் பேரலைத் தாக்குதலில் பேரிழப்பை சந்தித்தது. நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி, சென்னை என தமிழக கடலோர மாவட்டங்கள் கடும் பாதி்ப்பையும், உயிரிழப்பையும் சந்தித்தன. ஆனால் நாகையும், கடலூரும்தான் மிகப் பெரிய அளவில் உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்களாகும்.
சுனாமி தாக்கி நான்கு ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இதையொட்டி சுனாமி பாதித்த பகுதிகளில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஞ்சலிக் கூட்டங்கள், அமைதிப் பேரணிகள், கூட்டுப் பிரார்த்தனை என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணி முழுமையான அளவில் நடந்து முடிந்துள்ளதாக நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுனாமி தாக்குதலில் உயிரிழந்த 6605 பேரில் 18 பேரின் குடும்பங்களைத் தவிர மற்றவர்களுக்கு நிவாரண உதவிகள் முழு அளவில் வழங்கப்பட்டு விட்டன.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 17,852 நிரந்தர வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
சுனாமி மறு வாழ்வுப் பணிகளுக்காக ரூ. 876 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ. 656 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார்.
கடலூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் பல்வேறு மீனவ கிராமங்களில் இன்று அஞ்சலி கூட்டங்கள் நடந்தன. வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சுனாமியில் உயிரிழந்தவர்களின் சமாதிகளில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டுக் கூட்டங்கள் நடைபெற்றன.
பல கிராமங்களில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் செல்லவில்லை. கருப்பு பேட்ஜ் அணிந்தும், கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றியும் துக்கம் அனுசரித்தனர்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ...
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
இலங்கையில் ..
இலங்கையில் 2 நிமிடம் துக்க அனுசரிக்கப்பட்டது. இன்றைய தினத்தை பாதுகாப்பு தினமாக இலங்கை அரசு அறிவித்திருந்தது.
அரசு அலுவலகங்களில் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை அமைதி அனுசரிக்கப்பட்டது.
கண்டி தர்மராஜா கோவிலில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.