திருமங்கலம்-தேமுதிகவுககு 'முரசு' கிடைக்குமா?
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தலில் போட்டியிடும் 11 சுயேச்சைகளும் 'முரசு' சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளதால் அங்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு அந்த சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக முரசு சின்னத்தில் போட்டியிட்டது. அதில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். இருந்தாலும் முரசு சின்னம் ரொம்ப ராசி என்று தேமுதிகவினரிடையே 'சென்டிமென்ட்' நிலவுகிறது.
ஆனால், தேமுதிகவுக்கு இன்னும் மத்திய தேர்தல் ஆணைய அங்கீகரம் கிடைக்கவில்லை. இதனால் அந்தக் கட்சிக்கென அதிகாரப்பூர்வ சின்னம் ஏதும் ஒதுக்கப்படவில்லை.
இந் நிலையில் முரசு சின்னத்தை தக்க வைக்க தேமுதிக முயன்று வருகிறது. திருமங்கலம் இடைத் தேர்தலில் கடந்த முறை முரசு சின்னத்தில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்த தனபாண்டியன் தான் இம்முறையும் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
இம்முறையும் தனக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் அவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால், இவரை போலவே இங்கு போட்டியிடும் 11 சுயேச்சை வேட்பாளர்களும் அதே சின்னத்தைக் கேட்டு விஜய்காந்த் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
தேர்தல் ஆணைய அங்கீகாரம் இல்லாததால் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனும் தேர்தல் கமிஷனால் சுயேச்சையாகவே கருதப்படுகிறார்.
இதனால் மற்ற சுயேச்சைகளைப் போல மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு அதில் எதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் கமிஷனிடம் தனபாண்டியன் கோரியுள்ளார். அதில் முரசு, தீபம், கோயில்மணி ஆகிய சின்னங்களை அவர் வரிசைப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் இன்று (டிசம்பர் 26) அறிவிக்கப்படுகின்றன. இதில் தான் தேமுதிகவுக்கு முரசு கிடைக்குமா இல்லையா என்பது தெரியும்.
கருப்பு பேட்ஜ் அணிந்து பிரச்சாரம்:
இதற்கிடையே தேமுதிகவினர் சின்னத்தை குறிப்பிடாமல் திருங்கலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் வரை தொண்டர்கள், நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து தான் கட்சி பணிகளில் ஈடுபட வேண்டும் என விஜயகாந்த் தனது கட்சியின் இளைஞரணி மாநாட்டில் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.