சான்டா கிளாஸ் வேடத்தில் வந்து துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு அருகே, சான்டா கிளாஸ் வேடத்தில் வந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிறிஸ்துமஸுக்கு முதல் நாளான வியாழக்கிழமை இரவு இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை வெறித் தாக்குதலில் 8 வயது சிறுமி, 20 வயது பெண் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவினா என்ற இடத்தில் (லாஸ் ஏஞ்செல்ஸிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள சிறிய நகரம்) இந்த சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த 2 மாடிகளைக் கொண்ட வீட்டுக்கும் அந்த நபர் தீவைத்துள்ளார். இதில் அந்த வீடு பெரும் சேதமடைந்தது.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து சுட்டவர் யார், இறந்தவர்கள் யார் என்ற விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை.
இருப்பினும் தாக்குதலில் ஈடுபட்ட நபர் ப்ரூஸ் ஜெப்ரி பார்டோ என்றும், அவருக்கு 45 வயது என்றும் தெரிய வந்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் இரவில் சம்பவம் நடந்த வீட்டி்ல விருந்து நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்தான் பார்டோவின் பெயரைக் கூறியுள்ளனர். அவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் பூண்டிருந்தாராம். எனவே அவர்தான் கொலையாளி என போலீஸார் கருதுகிறார்கள்.
பார்டோவுக்கு மனைவியுடன் மோதல் இருந்துள்ளது. இதனால் அவர் மன நிலை பாதிக்கப்பட்டுக் காணப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த வீடு, பார்டோவின் உறவினர் ஒருவரின வீடாகும்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து துப்பாக்கியால் சுட்டு விட்டு, வெளியே போகும்போது சாதாரண உடையில் போயுள்ளார் பார்டோ என்று தெரிகிறது.
கிறிஸ்துமஸுக்கு முதல் நாளன்று, கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து துப்பாக்கியால் சுட்டு 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.