கஸாப்பை அடையாளம் காட்ட 40 சாட்சிகள்
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியுள்ள அஜ்மல் கஸாப்பை அடையாளம் காட்டுவதற்காக 40 சாட்சிகளை போலீஸார் சேர்த்துள்ளனர்.
ஜனவரி முதல் வாரம் ஆர்தர் சாலை சிறையில் நடைபெறவுள்ள அடையாள அணிவகுப்பின்போது 40 பேரும், கஸாப்பை அடையாளம் காட்டுவார்கள்.
இதுகுறித்து குற்றப் பிரிவு இணை ஆணையர் ராகேஷ் மரியா கூறுகையில், சாட்சிகள் யார் என்ற விவரத்தை வெளியிட முடியாது. ஆனால் 40 பேர் கஸாப்பை அடையாளம் காட்டவுள்ளனர் என்றார்.
தற்போது போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள கஸாப்புக்கு ஜனவரி 6ம் தேதி காவல் முடிகிறது. அப்போது மேலும் 3 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு கோர போலீஸார் முடிவு செய்துள்ளன். அந்த சமயத்தில் அடையாள அணிவகுப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
போலீஸ்காரர் அருண் ஜாதவ், இந்த சாட்சிகளில் மிக முக்கிமயானவர் ஆவார். கஸாப்பும், இஸ்மாயில் கானும், காமா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தி விட்டு, போலீஸ் ஜீப்பை தடுத்து நிறுத்தி அதில் இருந்த போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டு, அதை எடுத்துக் கொண்டு தப்பினர். அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, பிணமான போலீஸாருக்கு மத்தியில் பதுங்கியபடி பயணித்தவர் அருண் ஜாதவ்.
பின்னர் ஜீப்பை ஒரு இடத்தில் விட்டு விட்டு இறங்கிய தீவிரவாதிகள் இருவரும், மந்த்ராலயா அருகில் வந்த ஸ்கோடா காரை நிறுத்தி அதை ஓட்டி வந்த உரிமையாளர் அரசாவை துப்பாக்கி முனையில் மிரட்டி இறக்கி காரை எடுத்துக் கொண்டு தப்பினர். அரசாவும் சாட்சிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர சத்ரபதி ரயில் நிலையத்தில் கஸாப்பும், இஸ்மாயில் கானும் சரமாரியாக சுட்டதை நேரில் பார்த்த போலீஸாரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடையாள அணிவகுப்பு குறித்த ஏற்பாடுகள் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் ஸ்வாதி சாத்தேவுடன், உயர் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அடையாள அணிவகுப்பின்போது கஸாப், சாட்சிகளை நேரடியாக பார்க்காமல் இருக்கும் வகையில், ஒரு பக்கம் மட்டும் பார்க்கும் வகையிலான கண்ணாடித் தடுப்பை ஏற்படுத்தி அதன் வழியாக கஸாப்பை சாட்சிகள் பார்த்து அடையாளம் சொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாம்.
போலீஸ் வசம் உள்ள கஸாப்புக்கு தற்போது 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் காவல் முடிந்ததும் அவனை ஆர்தர் சாலை சிறையி்ல் அடைக்க வேண்டும். ஆனால், இதில் சில பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளன.
தாதா சோட்டா சகீலின் கூட்டாளிகள் சிலரும், தாதாக்கள் அருண் காவ்லி, டி.கே.ராவ் ஆகியோரும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தாவூத் இப்ராகிமின் எதிரியான சோட்டா ராஜனின் கூட்டாளி ஒருவனும் சிறையில் உள்ளான். இதுதவிர மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள சிலரும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். எனவே கஸாப்புக்கு இந்த சிறையில் பாதுகாப்பு இருக்குமா என்பது குறித்து போலீஸார் தீவிர ஆய்வில் உள்ளனர்.
கஸாப்பை இங்கு அடைப்பதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்று சிறைக்கு வந்து முழு அளவில் ஆய்வுகளை நடத்திய பின்னரே, கஸாப், சிறையில் அடைக்கப்படுவான் என்று தெரிகிறது.
மேலும், கஸாப் அடைக்கப்படும் அறை உள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.