பாக். வெளியுறவு செயலாளர்-இந்திய தூதர் சந்திப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் சத்யபிரத பால் அந் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் பஷீரை சந்தித்து பேசினார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் தாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு இந்தியாவின் தரப்பில் பால் வலியுறுத்தினார். இதன்மூலம் மட்டுமே இரு நாட்டு உறவுகள் சீர்படும், பதற்றம் குறையும் என்றும் பால் தெரிவித்தார்.
டெல்லியில் செளதி வெளியுறவு அமைச்சர்:
இந்நிலையில் பாகிஸ்தானின் நட்பு நாடான செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரும் இளவரசருமான சவுத் அல்-பைசல் டெல்லி வந்துள்ளார். அவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மும்பை தாக்குதல், இதையொட்டி எழுந்துள்ள பதற்றம் குறித்துப் பேசினார்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை சவுத் அல்-பைசலிடம் முகர்ஜி வழங்கியதோடு இந்த விஷயத்தில் பாகிஸ்தானை வழிக்குக் கொண்டு வர உதவுமாறும் முகர்ஜி கோரிக்கை விடுத்தார்.
பின்னர், நிருர்களிடம் பேசிய பைசல் கூறுகையில், தீவிரவாதத்துக்கு முடிவு கட்ட உலக நாடுகளிடையே முழு ஒத்துழைப்பு வேண்டும். இதற்காக உலக அளவிலான அமைப்பை அனைத்து நாடுகளும் இணைந்து ஏற்படுத்துவது அவசியமான ஒன்று என்றார்.