எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு இல்லை: இந்தியா
டெல்லி: பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் கூடுதல் துருப்புகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா தாக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பிலும், உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கும் வகையிலும், இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தனது படைகளைக் குவித்து வருகிறது. மேலும் விமானப்படை விமானங்களையும் முக்கிய நகரங்கள் மீது அடிக்கடி பறக்கச் செய்து வருகிறது.
இதனால் பாகிஸ்தானில் போர் பீதி நிலவுகிறது. மேலும், இந்திய எல்லைப் பகுதியிலும் பதற்றம் நிலவுகிறது.
இதனால் இந்தியா கூடுதல் துருப்புகளை எல்லைக்கு அனுப்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கூடுதல் துருப்புகளை அனுப்பும் திட்டமே இல்லை என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் சிதன்சு கர் கூறுகையில், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் தவறானவை, ஊகத்தின் அடிப்படையிலானவை என்று ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய துருப்புகளின் நடமாட்டம் சாதாரணமானதுதான், வழக்கமான ஒன்றுதான். ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் ஆண்டுதோறும் குளிர்காலத்தின்போது நடத்தப்படும் பயிற்சியில்தான் தற்போது ராணுவம் ஈடுபட்டுள்ளது.
மேலும் துருப்பு மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ஜம்மு காஷ்மீருக்குப் படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அதேபோல, பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினருக்குப் பதில் ராணுவ வீரர்களை நிறுத்தும் திட்டமும் இல்லை.
எல்லையைக் கொக்கும் பொறுப்பு தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் வசமே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இருப்பினும், எல்லைப் பகுதியில் நிலவி வரும் சூழ்நிலையை ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எதிர் தரப்பில் படைகளின் நடமாட்டத்தையும் நமது ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றார் அவர்.