காட்பாடியில் போலீஸ் பயிற்சி பள்ளி: துரைமுருகன்
வேலூர்: காட்பாடி தொகுதியில் போலீஸ் பயிற்சி பள்ளி தொடங்க 100 ஏக்கரில் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், மாநில பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் அடுத்த தாராபடவேடு நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள பேருந்து நிலைய அடிக்கல் நாட்டுவிழா, நூலக திறப்பு விழா, இலவச கேஸ் வழங்கும் விழா வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
விழாவில் மாநில பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், திமுக ஆட்சியில் பல அணைகள், பாலங்கள், கட்டிடங்களை நான் கட்டியுள்ளேன். அதை எல்லாவற்றையும் விட என் தொகுதியில் நூலகம் திறந்து வைப்பதில் எனக்கு மனநிறைவு அதிகம்.
காரணம், காலத்தால் அறியாத செல்வம் கல்வி. அந்த கல்விக்கு ஊக்கியாக இருப்பது நூலகங்கள். நூலகங்கள் உலகத்தை பார்க்கின்ற ஜன்னல்கள் என்று அறிஞர்கள் கூறுவார்கள்.
திறந்து வைக்கப்பட்ட இந்த நூலகத்தில் முதல்வர் எழுதிய, பல அறிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்கள் இடம்பெறும். இந்த நூலகத்திற்கு என் வீட்டிலிருந்து 1000 நூல்களை வழங்குகிறேன்.
இன்னும் இங்கு வரவேண்டிய ஒரு தாலுகா மருத்துவமனை, சிவில், கிரிமினல் நீதி மன்றம். அவை அடுத்த மாதம் முறைப்படி திறந்து வைக்கப்படும்.
அடுத்து சிப்காட் தொழிற்பேட்டை ஒன்று அமைக்க வேண்டும். அதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
100 ஏக்கரில் போலீஸ் பயிற்சி பள்ளி காட்பாடியில் அமைக்கப்பட உள்ளது. அதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
காட்பாடி தொகுதியை ஒரு தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றியுள்ளேன் என்றார்.