ரூ. 20 லட்சம் லஞ்சம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சென்னை: ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்ட இன்ஸ்பெக்டரை சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவிட்டார்.
சென்னை காவல்துறை அதிகாரிகள், குறிப்பாக லஞ்சம் வாங்குவோர் கதி கலங்கிப் போயுள்ளன். காரணம், சமீப காலமாக அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்தி வரும் ரெய்டுகளும், கையும் களவுமாக பிடித்து வருவதுமே.
ஆண், பெண் என பாரபட்சமே இல்லாமல் லஞ்சம் வாங்கும் காவல்துறை அதிகாரிகளை வளைத்து வளைத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பிடித்து வருகின்றனர்.
இதுதவரை 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் என லஞ்சம் வாங்கியோர் சிக்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆணையர் ராதாகிருஷ்ணன்,
உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், லஞ்சம் வாங்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்.
இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது கமிஷனரே நேரடி நடவடிக்கையில் இறங்கி அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டரின் பெயர் மார்ட்டின் ராபர்ட். மத்திய குற்றப்பிரிவு போலீசில் மோசடி தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ரூபி மனோகரன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் இவர் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், நான் நிலம் வாங்கி கொடுக்கும், வீடு கட்டி கொடுக்கும் காண்டிராக்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணபதி என்பவர் என் மீது போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். நிலம் வாங்கி கொடுப்பதாக வாங்கிய 1 கோடி ரூபாயை நான் ஏமாற்றி விட்டதாக புகாரில் கூறி இருந்தார். இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ராபர்ட் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
இந்த வழக்கில் ரூ.2 கோடியே 60 லட்சம் ரூபாயை வட்டியோடு சேர்த்து கொடுக்க வேண்டும் என்றும், அதோடு என்னை கைது செய்யாமல் இருக்க, ரூ.20 லட்சம் லஞ்சமாகவும் இன்ஸ்பெக்டர் கேட்டார். அவர் கேட்ட பணத்தை கொடுத்ததால் என்னை கைது செய்யாமல் விட்டார். அவர் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து உதவி ஆணையர் ஒருவரை இதுகுறித்து விசாரிக்க ஆணையர் உத்தரவிட்டார். மேலும் ராபர்ட் வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
விசாரணையில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ராபர்ட் லஞ்சம் வாங்கியது உண்மை என்பது நிரூபணமானது.
இதையடுத்து முதல் கட்ட விசாரணை அறிக்கை கமிஷனரிடம் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ராபர்ட்டை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஒருவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையி்ல் ராபர்ட் மீது மேல் நடவடிக்கை (கைது, விசாரணை) இருக்கும் எனத் தெரிகிறது.