தாய்லாந்து கடற்படை அட்டூழியம்: 310 பேர் கடலில் மூழ்கி பலி
போர்ட்பிளேர்: தாய்லாந்து நாட்டு கடற்படையின் முட்டாள்தனமான செயலால் 310 பேர் அந்தமான் அருகே கடலில் மூழ்கினர். அவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 102 பேரை இந்திய கடலோரக் காவல் படை பத்திரமாக மீட்டுள்ளது.
வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 412 பேர், வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரத்தில் இருந்து, 6 விசைப்படகுகளில் மலேசியா நாட்டுக்கு கள்ளத்தனமாக புறப்பட்டனர்.
அவர்களை வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு ஏஜெண்டு 45 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்தார். இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் அவரை அவர் வசூலித்தார்.
புறப்பட்ட சில நாட்களிலேயே நடுக்கடலில் அவர்களை தாய்லாந்து கடற்படையினர் பிடித்தனர். விசாரணைக்குப் பின்னர் அத்தனை பேரையும் ஒரு சாதாரண மரப் படகில் ஏற்றி திருப்பி அனுப்பியது தாய்லாந்து கடற்படை.
412 பேரும் ஒரே படகில் ஏற்றப்பட்டதால் படகு பாரம் தாங்காமல் திணறியது. அந்தமான் அருகே வங்கக் கடலில் 15 நாட்களுக்கும் மேலாக அந்த படகு தத்தளித்தது.
இந்த நிலையில், லிட்டில் அந்தமான் அருகே கடற்கரையில் இருந்து கலங்கரை விளக்கு வெளிச்சம் தெரிவதைக் கண்ட படகில் இருந்தவர்கள், ஏதோ ஒரு ஊர் தெரிகிறது என்று நினைத்து நீந்திப் போய் விடலாம் என கருதி கடலில் குதித்தனர்.
இப்படியாக கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் பேர் கடலில் குதித்துள்ளனர். அவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே நீந்திக் கரை சேர்ந்துள்ளார். லிட்டில் அந்தமானுக்குச் சென்ற அவர் அங்கு போலீஸாரிடம் நிலைமையைக் கூற, கடலோரக் காவல் படைக்கு தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.
சாண்டி முனை பகுதியில் தங்களைப் பார்த்து கைகளை ஆட்டி உதவி கேட்ட 11 பேரை ஹெலிகாப்டர் மீட்டது. 91 பேரை கப்பல்கள் மீட்டன. மற்ற 310 பேர் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
மேற்கண்ட தகவல்களை அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கடலோரக் காவல் படையின் கமாண்டரும், போலீஸ் ஐ.ஜி.யுமான சர்மா தெரிவித்தார்.
படகில் 412 பேர் இருந்ததாக தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 102 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் கதி தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சிலரது உடல்களை கடலோரக் காவல் படை மீட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தாய்லாந்துப் படையினர் முட்டாள்தனமாக செய்த காரியத்தால் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீட்புப் பணியில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த வரத், பிகாஜி ஆகிய கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.