அதிமுக வேட்பாளரை கொல்ல சதி என்கிறார் ஜெ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருமங்கலம் சட்டமன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வன்முறை மூலம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்திலும், இல்லையென்றால் குறைந்தபட்சம் எப்படியாவது தேர்தலை நிறுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்திலும் முதல்வர் கருணாநிதி செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிமுக முன்னணி தலைவர்கள் மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு அவர்களை சிறையில் தள்ளுவது, இரண்டாவது மட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் செயல் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தோழமை கட்சி தொண்டர்களை அடித்து விரட்டுவது, வாக்காளர்களை மிரட்டுவது, பணம் கொடுப்பது போன்ற வேலைகளில் முனைப்பு காட்டி கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இது மட்டுமல்லாமல், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், திமுக சார்பில் வாக்காளர்கள் அனைவருக்கும் கறி விருந்து கொடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஆடுகளும், ஆயிரக்கணக்கான கோழிகளும் கொண்டு செல்லப்படுகின்றன என்றும், இந்த விருந்தில் வந்து கலந்து கொள்ளும் படி ஒலிபெருக்கிகள் மூலம் திமுகவினர் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், ஆனால் வாக்காள பெருமக்கள் இது போன்ற விருந்தில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் புறக்கணிக்கின்றனர் என்றும் தகவல்கள் வருகின்றன.
இந்த சூழ்நிலையில், அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை கடத்தி சென்று கொலை செய்ய திட்டம் தீட்டி இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இனி காவல்துறையை நம்பி எந்த வித பிரயோஜனமும் இல்லை. எனவே, ஜனநாயகத்தை பாதுகாக்க ஏதுவாக, அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு முழு பாதுகாப்பு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.