சத்யமூர்த்தி பவன் தாக்குதல்-தங்கபாலுவிடம் விசாரணை
சென்னை: சென்னை சத்யமூர்த்தி பவன் மீது விடுதலை சிறுத்தைகள் நடத்திய தாக்குதல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ்-விடுதலைச் சிறுத்தைகள் இடையே மோதல் நடந்து வருகிறது.
கடந்த 20ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சத்தியமூர்த்தி பவன் மீது நடத்திய தாக்குதலில் அந்த அலுவலக ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த இரு நாட்களாக சத்தியமூர்த்தி பவனில் நேரில் விசாரணை நடத்திய சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முகமது ஷாஜகான், தங்கபாலுவிடமும் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு,
விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஈழ மாநாட்டில் பேசிய சுப.வீரப்பாண்டியன், காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசிய டேப் என்னிடம் உள்ளது.
ஆனால், தான் தவறாகப் பேசவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேடையில் அவர் என்ன பேசினார் என்பது பற்றி பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி உறவு வைத்துக் கொள்ளாது. இதைத் தான் எங்கள் கட்சியின் தமிழக பொறுப்பாளர் வயலார் ரவியும், செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லியும் கூறி வருகிறார்கள்.
இதற்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் முடிச்சு போட முடியாது. தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. தேர்தல் கூட்டணி பற்றி அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.
திருமங்கலம் தொகுதியில் ஜனவரி 5ம் தேதி முதல் நான் பிரசாரம் மேற்கொள்கிறேன். அங்கு தேர்தலை சீர்குலைக்க வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைத்தாலும் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.