ரூ. 25 லட்சம் போலி ரசீது-மாஜி பாமக எம்பிக்கு சிறை
சென்னை: பாலிடெக்னிக் தொடங்க ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற வங்கியில் ரூ. 25 பணம் செலுத்தியதாக போலியாக ரசீது தயாரித்து மோசடி செய்த முன்னாள் பாமக எம்பி துரைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உடந்தையாக இருந்த இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி நாடாளுமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்.பியாக இருந்தவர் துரை. இவர் வந்தவாசி சம்புவராயர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.
எஸ்.மன்னப்பன், டி.டி.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக உள்ளனர். இந்த அறக்கட்டளை சார்பில் வந்தவாசி அருகேயுள்ள பிர்தூர் கிராமத்தில் பாலிடெக்னிக் தொடங்க திட்டமிடப்பட்டது.
அதற்கான அங்கீகாரம் பெற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.) விண்ணப்பித்தனர். இந்த அங்கீகாரத்தைப் பெற வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.25 லட்சம் செலுத்தி, அந்த ரசீதை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி.
ஆனால், இந்தப் பணத்தை வங்கியில் செலுத்தாமலேயே இதற்கான போலி ரசீதை இவர்கள் தயாரித்தனர். இந்தியன் வங்கியில் ரூ. 25 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1998ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதியிட்ட ஒரு ரசீதை தயாரித்தனர்.
இதை ஏ.ஐ.சி.டி.இயின் சென்னை மண்டல அலுவலகத்தில் மாஜி எம்.பி துரை சமர்ப்பித்தார்.
இந்த போலி ரசீது தயாரிக்க இந்தியன் வங்கியின் வந்தவாசி கிளை முன்னாள் மேலாளர் ஆர்.லட்சுமி நரசிம்மன், மன்னப்பன், டி.டி.சுப்பிரமணியம் ஆகியோரும் மாஜி எம்பி்க்கு உடந்தையாக இருந்தனர்.
இந்த போலி ரசீது மோசடி பின்னர் வெட்ட வெள்ச்சமாகியது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த சிபிஐ அதிகாரிகள் துரை, ஆர்.லட்சுமி நரசிம்மன், மன்னப்பன், டி.டி.சுப்பிரமணியம் ஆகியோர் மீது மோசடி, சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி எஸ்.ரங்கராஜு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதால் லட்சுமி நரசிம்மனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்தார்.
முன்னாள் எம்.பி.துரை, மன்னப்பன், டி.டி.சுப்பிரமணியம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.30,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து துரை அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார். இதையடுத்து அவருக்கான சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.