ஜன. 1 முதல் தொழிற்சாலைகளுக்கு 2 நாள் மின்சார தடை
சென்னை: ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக தொழில் நிறுவனங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் மின் விடுமுறை அளிக்கப்படும். மற்ற 5 நாட்களும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தொழிலதிபர்களுடன் ஆற்காடு வீராசாமி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தவிர சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு ஒரு நாளைக்கு 22 மணி நேரத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஒன்றரை மணி நேரம் மின்தடை அமலில் உள்ளது. இருப்பினும் தற்போது ஓரளவு மின்சாரக் கையிருப்பு இருப்பதால் தடையற்ற மின்சாரத்தை வழங்கி வருகிறோம்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கான மின்தடையை 40 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாகவும், மற்ற சிறிய தொழில் நிறுவனங்களுக்கான மின் தடையை 20 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாகவும் குறைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.
அல்லது தொழில் நிறுவனங்களுக்கு வாரத்தில் 2 நாட்களுக்கு முழுமையாக விடுமுறை அளித்து, எஞ்சிய 5 நாட்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கலாமா என்பது குறித்த மற்றொரு ஆலோசனையும் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற தொழிலதிபர்கள், தங்கள் நிறுவனங்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளிக்க சம்மதம் தெரிவித்து எஞ்சிய 5 நாட்கள் தடையற்ற மின்சாரம் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இது பற்றி முதல்வரிடம் ஆலோசனை நடத்தினேன். அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் தொழில் நிறுவனங்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் முழு விடுமுறை அளித்து, எஞ்சிய 5 நாட்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் இந்த முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
6 - 10 மணி மின்சாரம் பயன்படுத்தக் கூடாது
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொழிற்சாலைகள் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடாது.
டெல்லியில் மத்திய மின்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷை முதல்வர் சந்தித்தபோது அளிக்கப் பட்ட வாக்குறுதியின்படி தற்போது மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி மாதம் முதல் மேலும் 600 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. காற்றாலைகள் மூலம் 300 முதல் 600 மெகாவாட் மின்சாரமும், நீர் மின்சாரம் மூலம் பகலில் 750 மெகாவாட்டும், இரவில் 1400 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆயினும் தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு சராசரியாக 1000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இதனை மத்திய தொகுப்பிலிருந்து பெற்றும், வெளியிலிருந்து விலைகொடுத்து வாங்கியும் சமாளித்து வருகிறோம்.
மே மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது என்றார் ஆற்காடு வீராசாமி.