சந்த்ராயன் துணைக் கலம் நிலவில் நுழைந்தபோது எடுத்த படங்கள்!
பெங்களூர்: நிலவைச் சுற்றி வரும் சந்த்ராயன் விண்கலத்திலிருந்து நிலவுக்குள் இறக்கப்பட்ட துணைக் கலமான 'மூன் இம்பாக்ட் புரோப்' (எம்ஐபி-MIP) நிலவுக்குள் இறங்கியபோது எடுத்த படங்களை இஸ்ரோ இப்போது வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்த்ராயன்-1 விண்கலம், நவம்பர் 8ம் தேதி நிலவின் 100 கி.மீ. சுற்றுப் பாதையை அடைந்தது.
சந்த்ராயனிலிருந்து நவம்பர் 14ம் தேதி பிரிந்த எம்ஐபி துணைக் கலம் அன்றைய தினமே நிலவில் தரையிறங்கியது (தரை மோதியது). இந்தக் கலம் நிலவின் தென் துருவப் பகுதியைத் தொட்டது.
இதில் வீடியோ, ரேடார், ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகியவை இருந்தன. நிலவுக்குள் இறங்கும்போது இந்த வீடியோ படங்களை எடுத்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பியது.
தரையிறங்கும் வேகத்தை அறிய ரேடார் உதவியது. ஸ்பெக்ட்ரோமீட்டர் தரையிறங்கும்போது நிலவின் வளி மண்டலத்தை ஆய்வு செய்தது.
எம்ஐபி எடுத்த வீடியோவிலிருந்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு 3,200 பிரேம்கள் (படங்கள்) கிடைத்துள்ளன. இதி்ல் நிலவின் தரைப் பகுதியிலிருந்து 2 முதல் 3 கி.மீ உயரத்தில் விண்கலம் பறந்தபோது எடுத்த 2 படங்களை இஸ்ரோ இப்போது வெளியிட்டுள்ளது.
இதைத் தவிர நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்த்ராயன் விண்கலம் எடுத்துள்ள புதிய படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.