புத்தாண்டு 'ஜல்சா-ஜல்சா': தடை கோரும் பாமக
பாமக சட்ட பாதுகாப்பு குழு தலைவர் பாலு ஏராளமான வழக்கறிஞர்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கூடுதல் போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தார்.
அதில், புத்தாண்டு பிறக்கும் இரவில் சென்னை நகரில் நட்சத்திர ஹோட்டல்களிலும், கடற்கரை சாலை பண்ணை வீடுகளிலும் சிறப்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கடந்த சில தினங்களாக விளம்பரம் வந்தவண்ணம் உள்ளது.
ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை கட்டணம் வசூலித்து விருந்துகள் நடைபெற உள்ளதாகவும், விருந்தில் வேண்டும் அளவு மது அருந்தலாம் என்றும், வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வரவழைக்கப்பட்ட பெண்களை உல்லாச விருந்தில் நடனமாட செய்து பலவித ஆட்டம், பாட்டம் நடைபெற உள்ளதாகவும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
'கோல்டன் கி கப்புள்', ' ஜல்சா-ஜல்சா':
விருந்து நிகழ்ச்சிகளில் பிரெஞ்சு முத்த காட்சிகள், ரம்யமான மெழுகுவர்த்தி ஒளி விருந்து, ஜோடி மாற்றும் நடனம், கோல்டன் கி கப்புள்' எனப்படும் கார் சாவிகளை போட்டு பெண்களை உல்லாசம் அனுபவிக்கும் நிகழ்ச்சி, ஜல்சா-ஜல்சா, ரஷிய அழகிகளின் பாலே நடனம், மழை நடனம், நெருப்பு நடனம் போன்ற விதவிதமான தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் நடன நிகழ்ச்சிகள் நட்சத்திர ஓட்டல் விழாக்களில் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபாசங்களையும், அசிங்கங்களையும் அரங்கேற்றி இளைஞர்களை வசியப்படுத்தி பணம் பறிக்கும் வேலையில் நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளே உறுதுணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
போலீசார் தலையிடமாட்டார்கள் என்று வாடிக்கையாளர்களை தைரியப்படுத்தி நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தினர் வெளிப்படையாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு சவேரா விடுதியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் 3 இளைஞர்கள் உயிர் பலியான சம்பவம் நம்மை பெரிதும் பாதித்தது. நிகழ்ச்சி நடந்த பிறகு வருத்தப்படுவதைவிட, நிகழ்ச்சியை நடக்காமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் காவல்துறை இறங்க வேண்டும்.
சென்னை நகரில் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களையும் ஆய்வு செய்து புத்தாண்டு நள்ளிரவில் அரங்கேற இருக்கும் நடன நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். கலாசார சீரழிவை கருத்தில் கொண்டும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் போலீசார் இந்த நடவடிக்கையை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கோரப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அனுமதிக்கலாமா?:
இந்தநிலையில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், புத்தாண்டு தினத்தை அமைதியாகக் கொண்டாடலாம். வழிபாட்டு இடங்களுக்குச் சென்று வழிபடலாம். நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று விருந்துண்டு மகிழ்ந்து வாழ்த்துக் கூறலாம். பொது இடங்களில் கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறி மகிழலாம்.
உணவு விடுதிகளுக்குச் சென்று தான் புத்தாண்டைக் கொண்டாட வேண்டுமென்றால், அங்குச் செல்பவர்கள் விருந்துண்டு நண்பர்களுக்கும் விருந்தளித்து உபசரிக்கலாம்.
ஆனால், குடிக்கலாம் வாருங்கள், அழகிகளுடன் கும்மாளம் போடலாம் வாருங்கள், கவர்ச்சி நடனம் ஆடலாம் வாருங்கள், கோவா கடற்கரை சூழலில் இரவைக் கழிக்கலாம் வாருங்கள் என்றெல்லாம் நடப்பதற்குத் தமிழகத்தின் தலைநகரில் அனுமதிக்கலாமா? நமது கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய கவர்ச்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கக் கூடாதா?
இவை பற்றியெல்லாம் தமிழக அரசு குறிப்பாக முதல்வர் உடனடியாக முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.