For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உகாண்டா..காதல்.. விசா.. சென்னை வாசம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: படிக்க வந்த இடத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுடன் காதல் கொண்டதால், சொந்த நாட்டுக்குத் திரும்ப மனம் இல்லாமல் கடந்த 30 வருடங்களாக விசா இல்லாமல் சென்னையில் வசித்து வரும் உகாண்டா நாட்டுக்காரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கம் சதாசிவம் தெருவில் வசிப்பவர் லூர்தர் அடைக்கலம். இவர் நேற்று முன்தினம் இரவு வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், தன்னுடைய வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஆசாமி மீது சந்தேகம் இருப்பதாகவும், அவருடைய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது தீவிரவாதியாக இருக்கலாம் என்று கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் சார்லஸ் அரபாக்கோ (48) என்றும், உகாண்டா நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

டிப்ளமோ என்ஜினீயரான அவர் விசா இல்லாமலேயே கடந்த 30 ஆண்டுகளாக சென்னை நகரில் சட்டவிரோதமாக வசித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் தீவிரவாதி அல்ல, காதல் 'வியாதியால்' பீடிக்கப்பட்டதால் சென்னையிலேயே செட்டிலாகி விட்டவர் என்று தெரிய வந்தது.

போலீஸாரிடம் அரபாக்கோ கூறுகையில், நான் கடந்த 1977ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பதற்காக கல்வி விசாவில் சென்னை வந்தேன். பாலிடெக்னிக் ஒன்றில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தேன். இங்கேயே நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது.

இங்கே படிக்கும்போது ஆங்கிலோ இந்திய பெண் ஒருவரிடம் எனக்கு காதல் ஏற்பட்டது. நானும், அந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் இணைந்து வாழ்ந்தோம்.

மேலும், உகாண்டாவில் இடி-அமின் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்தார். இதனாலும் எனது சொந்த நாட்டுக்கு போக விரும்பமில்லை.

தமிழகத்தின் அமைதியான வாழ்வு எனக்கு பிடித்துப்போய் இங்கேயே இருந்துவிட்டேன். பாஸ்போர்ட், விசா பற்றி கவலையில்லாமல் என்னுடைய வாழ்க்கையை 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மக்களோடு கழித்துவிட்டேன்.

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் நான் வசித்துள்ளேன். எனக்கு தமிழ் நன்றாக பேசத் தெரியும். என்மீது யாரும் சந்தேகம் கொண்டு போலீசுக்கு தெரிவிக்கவில்லை.

இனிமேலும் எனது சொந்த நாட்டுக்கு போகமாட்டேன். அரசின் அனுமதி பெற்று சென்னையிலேயே வசிப்பேன் என்று கூறியுள்ளார் அரபாக்கோ.

ஆனால் அவர் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்ததால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இவரைப் போல பாஸ்போர்ட், விசா இல்லாமல் சென்னை நகரில் தங்கியிருக்கும் வெளிநாட்டுக்காரர்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X