சின்ன பராந்தன் நகரை பிடித்து விட்டோம்: ராணுவம்
கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன பரந்தன் நகரைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. ஆனால் அதை விடுதலைப் புலிகள் உறுதி செய்யவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன பரந்தன் நகரைக் கைப்பற்றும் நோக்குடன் நேற்று அதிகாலை மேற்குப் புறத்திலிருந்து ராணுவம் தாக்குதல் தொடுத்தபடி முன்னேறத் தொடங்கியது.
இதைத் தடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர்.
சின்ன பரந்தன் சந்தி மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
சின்ன பரந்தனைப் பிடிக்கும் முயற்சியில் உதவ கிளிநொச்சியைச் சுற்றிலும் உள்ள படைப் பிரிவுகளை ராணுவம், பரந்தனை நோக்கி திருப்பி விட்டது.
நேற்று காலை முதல் நடந்து வந்த சண்டையில் 50 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், பரந்தன் நகரம் பிடிபட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை சின்ன பரந்தன் நகரம் தங்களது வசம் வந்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்த, இலங்கை விமானப் படை விமானங்கள் வானிலிருந்து குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் இலங்கை ராணுவப் படைகள் ஏ9 நெடுஞ்சாலையை வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் சீல் வைத்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அப்பாவிகளை தாக்கி அழிக்கும் ராணுவம்:
இதற்கிடையே கிளிநொச்சியைப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ராணுவம், தனது கோபத்தை அப்பாவித் தமிழர்கள் மீது காட்டி வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் முருகமோட்டை என்ற தமிழர்கள் கிராமம் உள்ளது. இங்கு இலங்கை படையின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியது.
இதேபோல அருகில் உள்ள சேத்துக்கண்டி என்ற இடத்திலும் குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. பள்ளிக்கூடத்திலும் குண்டுகள் விழுந்தன.
இந்த தாக்குதலில் சிவானந்தன் (30), மரியம்மா (55), சகாயம் மக்கிரட்ஸ் (24) மற்றும் சந்திரபோஸ் (36) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேர் காயமடைந்தன்.
இறந்தவர்களில் மரியம்மா, சகாயம் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். குண்டு வீச்சில் அவர்கள் உடல்கள் கோரமாக சிதறி இருந்தது.
குண்டு வீச்சில் அருகில் இருந்த செஞ்சிலுவை சங்க அலுவலகமும் சேதம் அடைந்தது. அங்கு நின்றிருந்த மாடு ஒன்றும் பலியானது.
இதற்கிடையே கிளிநொச்சி அருகே பல இடங்களில் சிங்கள படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
கண்ணி வெடிக்கு 3 ராணுவத்தினர் பலி:
மட்டக்களப்பு மாவட்டம் குடும்பிமலை என்ற இடத்தில் சிங்கள ராணுவ வண்டி மீது கண்ணிவெடி தாக்குதல் நடந்தது. இதில் 3 வீரர்கள் பலியானார்கள்.