For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிளிநொச்சி பிடிபட்டது-ராஜபக்சே!!

By Staff
Google Oneindia Tamil News

Lankan Forces
கொழும்பு: புலிகளின் தலைமையகமான கிளிநொச்சி முழுவதுமாக தங்கள் வசம் வந்துவிட்டதாக இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல மாத கடும் போருக்குப் பின் கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் இன்று காலை தெரிவித்தது.

இதை இந்திய தொலைக்காட்சியிடமும் அந் நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலாளரான கோதபய ராஜபக்சே உறுதி செய்தார். கிளிநொச்சியை எல்லா பக்கங்களில் இருந்தும் ராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

முழுமையாக பிடிபட்டது.. ராஜபக்ஷே:

இந் நிலையில் இன்று மாலை நிருபர்களிடம் பேசிய அந் நாட்டு அதிபர் ராஜபக்ஷே, உலகின் மிக சக்தி வாய்ந்த தீவிரவாத இயக்கம் என பல நாடுகளால் கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரமான கிளிநொச்சி நமது தீரமான வீரர்களின் முயற்சியால் முழுவதுமாக பிடிபட்டுவிட்டது.

இது இலங்கை ராணுவத்தின் மாபெரும் வெற்றியாகும். இது தீவிரவாதத்துக்கு எதிராக உலகுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த புத்தாண்டில் இந்த பெருமையான செய்தியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

இது தெற்கிடம் வடக்கு தோற்றதாக அர்த்தமில்லை. இது ஒட்டுமொத்த நாட்டின் வெற்றி. கிளிநொச்சியை தனி நாட்டின் தலைநகராக சிலர் வர்ணித்து வந்தனர். இப்போது புலிகள் முல்லைத்தீவின் ஒரு சிறிய பகுதிக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டனர்.

புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராஜபக்சே.

இந்த நகர் தான் புலிகளி்ன் அரசியல், ராணுவத் தலைமையகமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கடந்த வியாழக்கிழமை அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்திடம் பேசிய புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், நாங்கள் ஒரு கொரில்லா இயக்கம். எங்கள் பகுதியை இழந்தாலும் கூட தாக்குதலை கைவிட மாட்டோம். கொரில்லா தாக்குதலை இலங்கை ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்றார்.

வடக்கு மற்றும் தெற்கு கிளிநொச்சியிலிருந்து நகருக்குள் ராணுவம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சண்டையி்ல் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவல் இல்லை.

ஆனால், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பிடிபடும் வரை இந்தப் போர் ஓயாது என ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக முல்லைத்தீவில் வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் 15 புலிகள் பலியானதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

50 விடுதலைப் புலிகள் பலி:

கிளிநொச்சியைப் பிடிக்க நடந்த சண்டையில் 50 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், பல பெண் விடுதலைப் புலிகள் பிடிபட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் 57வது பிரிவு கிளிநொச்சி ரயில் நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தற்கொலை தாக்குதல்:

இதற்கிடையே கொழும்பில் உள்ள விமானப் படைத் தளமான ஸ்வேல் ஐலேண்ட் பகுதியில் இன்று மாலை ஒரு விடுதலைப் புலி நடத்திய தற்கொலைத் தாக்குதல் பஸ் சிதறியது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

பீட்டாவிலிருந்து மொரதுவா சென்ற அந்த பஸ் சிஏ கிராடினர் சாலையில் வந்தபோது அந்த விடுதலைப் புலி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X