திருமங்கலம்: யாருக்கும் ஆதரவில்லை-ராமதாஸ்
தற்போது திமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என்றும், தமிழகத்திலும் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை தாங்க வேண்டும் என்றும், அடுத்த மாதம் மீண்டும் பொதுக்குழு கூடி கூட்டணி பற்றி முடிவு செய்யும் என்றும் பாமக அறிவித்துள்ளது.
பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
இதில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், வேலு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், மக்களவை தேர்தல், கூட்டணி, திருமங்கலம் இடைத்தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுவாக தேர்தல் அமைதியாக நடத்தப்பட வேண்டும். வாக்காளர்கள் சுதந்திரமாக சிந்தித்து சுயமாக வாக்களிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அண்மை காலமாக நடைபெறும் இடைத் தேர்தல் களத்தில் ஜனநாயக மரபுகள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.
எனவே, இடைத் தேர்தல்களே தேவையில்லை. பொதுத் தேர்தலில் எந்த கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சிக்கே வாய்ப்பளித்து மற்ற கட்சிகள் ஆதரிக்க வேண்டும்.
அதன் மூலம் செலவு, நேரம் மிச்சமாவதுடன் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார். நடுநிலையாளர்களும், முன்னாள் நீதிபதிகளும், சட்டவல்லுனர்களும் இந்த கருத்துக்கு வலு சேர்த்துள்ளனர்.
திருமங்கலம் இடைத் தேர்தலில் நடந்து வரும் நிகழ்வுகள் தெரிவிக்கப்பட்டு வரும் புகார்களும் ராமதாசின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.
அரசியல் கட்சிகள் மூர்க்கத்தனமாக மோதிக் கொள்ளும் இடைத் தேர்தல்கள் தேவையில்லை. எனவே திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரையும் பாமக நேரடியாக ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்கிறது.
எனினும், தொகுதி வாக்காளர்கள் மீது தேர்தல் திணிக்கப்பட்டிருப்பதால் அத்தொகுதியைச் சேர்ந்த பாமகவினர், தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடக்கூடிய வேட்பாளரை முடிவு செய்து விருப்பப்படி வாக்களிக்கலாம் என பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை:
2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஆகியவற்றின்போது தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை.
இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டன. பாமகவுடன் தோழமையை முறித்துக் கொண்டதாக திமுக தானாக முடிவெடுத்து அறிவித்துள்ளது.
திமுகவின் இந்த முடிவால் அந்த கூட்டணியில் பாமக இப்போது இல்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மாநிலத்தில் செயல்படும் பாமக, மத்தியில் காங்கிரஸ் தலைமை தாங்குகிற ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொடர்கிறது.
தமிழகத்தில் காங். தலைமையில் கூட்டணி:
மாநிலத்திலும் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை தாங்க வேண்டும் என்ற கருத்தை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றும் விரும்புகிறது.
புதிய மக்களவையையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் மாநிலத்தில் கட்சிகளின் அணி சேர்க்கை, கூட்டணிகள் எப்படி அமையும் என்பது பற்றி தற்போது தெளிவற்ற நிலை நிலவுகிறது.
பாமகவின் வளர்ச்சி, கட்சியின் நலன் ஆகியவற்றை உத்தேசித்து வரும் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் பொதுக்குழு கூடி விவாதித்து கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.