பூரண மது விலக்கு தேவை: ராமதாஸ்
அரியலூர்: பொங்கல் திருநாள் முதல் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் காமராஜர் திடலில் பாமக மகளிரணி சார்பில் மதுஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மது விற்பனை மூலம் ரூ.10 கோடி வருமானம் கிடைக்கிறது என்கிறார்கள். அதற்கு பதிலாக ரூ.15 கோடி வருமானம் கிடைக்கக் கூடிய பல நல்ல திட்டங்களை பாமக அவர்களிடம் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். தமிழக முதல்வரும், மதுக்கடையின் வேலை நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தும், புதிய கடைகள் திறப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
இது ஒட்டகத்தின் மீது உள்ள சுமையில் ஒரு சிறு துரும்பை எடுத்து கீழே போட்டது போன்றதாகும்.
பொங்கல் திருநாள் முதல் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும் என்றார்.
இதில் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி கரு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், மது குடித்து இறந்தவர்களின் மனைவிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் மறுவாழ்வு நிதி வழங்க வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.