கோவை: ஹெல்மட் கட்டாயம்-பின்னால் அமர்பவர்களுக்கும்!
கோவை: கோவையில் இருசக்கர வாகன ஓட்டுனர்கள், பின்னால் அமர்ந்து செல்பபவர்களுக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் கமிஷனர் மகாலி கூறுகையில்,
கோவை நகரில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். புத்தாண்டு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
நேற்று ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்ற 300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துகளில் 292 பேர் மரணமடைந்துள்ளனர். 1,381 பேர் காயமடைந்துள்ளனர்.
309 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை முயற்சியில் 1316 பேர் காயமடைந்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நகரில் குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் 15 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரின் முக்கிய இடங்களில் 45 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 31 சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம் குற்றங்கள் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.
கடந்த 2007ம் ஆண்டை விட 2008ம் ஆண்டில் குற்ற வழக்குகள் 7.5 சதவீதம் குறைந்துள்ளது என்றார்.