For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிருடன் இருந்தவரை பிணமாக்கிய மருத்துவமனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளியை இறந்து விட்டதாக கூறி சவக் கிடங்குக்கு அனுப்பி வைத்து அவர் பரிதாபமாக உயிரிழக்கக் காரணமாகியுள்ளது சிங்காரச் சென்னையின் அரசு பொது மருத்துவமனை.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பின்புறத்தில் இருக்கும் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). அண்ணாசாலை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் ஒரு கடையில் மெக்கானிக் வேலை பார்த்து வந்த இவருக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

மயங்கிய நிலையில் இருந்த அவரை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்களும், ஊழியர்களும் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி 'உடலை' சவக் கிடங்குக்கு அனுப்பினர்.

ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு உயிர் திரும்பியதாகவும், உடனே டாக்டர்களிடம் கொண்டு சென்றபோது, தனியறையில் மீண்டும் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்ததாகவும் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

டாக்டர்கள் முதலிலேயே ஒழுங்காக பரிசோதித்து இருந்தால் மணிகண்டன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு, ஆனால் டாக்டர்கள் அலட்சியத்தாலேயே மணிகண்டன் உயிரிழந்தார் எனக் கூறி, அவரது உறவினர்களும், நண்பர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு 10 மணியளவில் விரைந்து வந்த போலீசார் முற்றுகையிட்டவர்களை விரட்டி அடித்தனர்.

இது பற்றி மணிகண்டனின் உறவினர்கள் கூறுகையில்,

மணிகண்டனை பரிசோதித்த டாக்டர், ஸ்டெதஸ்கோப் கூட வைத்துக் கூட பார்க்காமல், தொட்டுப் பார்த்துவிட்டு செத்து விட்டதாக கூறினார். அதன்பிறகு, மணிகண்டனை ஸ்ட்ரெச்சரில் வைத்து சவக்கிடங்குக்கு எடுத்துச் சென்றோம். சில நிமிடங்கள் கழித்து அங்கு வந்த உறவினர் ஒருவர், மணிகண்டன் மீது விழுந்து கதறி அழுதார். அப்போது மணிகண்டனின் உடலில் அசைவு ஏற்பட்டது. அவர் லேசாக இருமினார். அவருக்கு உயிர் இருந்தது தெரியவந்தது.

உடனே, அவரை மீண்டும் டாக்டர்களிடம் எடுத்துக் கொண்டு ஓடினோம். அங்கு சென்றதும், தனியறைக்கு மணிகண்டனின் ஸ்ட்ரெச்சர் தள்ளிச் செல்லப்பட்டது. சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர்கள் அவர் செத்து விட்டதாக கூறினர் என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X