நாளை முதல் லாரிகள் ஸ்டிரைக்-தமிழகத்தில் கேஸ் தட்டுப்பாடு
சென்னை: நாளை இரவு முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கமும் பங்கேற்கின்றன.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியைக் குறைக்க வேண்டும், கன ரக வாகனங்களின் டயர் விலையைக் குறைக்க வேண்டும்,
அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் சாதாரண டீசல், பெட்ரோல் கிடைக்க வழி செய்ய வேண்டும், லாரிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையைக் குறைக்க வேண்டும், சேவை வரியைக் குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து லாரி உரிமையாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த போராட்டத்தைத் தவிர்க்க மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து போராட்டம் நடக்கவுள்ளது.
இது குறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சரண் சிங், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள தந்தியில்,
இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தில் 50 லட்சம் லாரிகள் பங்கேற்கும். இதனால் வர்த்தகம் தொடர்புடைய 10 கோடி மக்கள் பட்டினி கிடக்க நேரிடும். இதனால் தயவுகூர்ந்து உடனே இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தில் மணல் லாரிகளும் பங்கேற்கின்றன.
தமிழகத்தில் கேஸ் தட்டுப்பாடு அபாயம்:
இதற்கிடையே தமிழகத்தில் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 4வது நாளாக நீடிக்கிறது. இதனால் இதன் தமிழகம் முழுவதும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சென்னை, கொச்சி, மங்களூர் ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து சிலிண்டர்களில் கேஸ் நிரப்பும் பாட்லிங் பிளாண்டுகளுக்கு எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளில் தான் கேஸ் கொண்டு செல்லப்படுகிறது.
இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள்- டேங்கர் லாரி உரிமையாளர்கள் இடையிலான வாடகை ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. வாடகையை உயர்த்தி புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என டேங்கர் உரிமையாளர்கள் கோருவதை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கவில்லை.
இதனால் கடந்த மாதம் 31ம் தேதி முதல் 3,500 டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் மாநிலம் முழுவதுமே கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் இன்னும் சில நாட்கள் நீடித்தால் கேஸ் தட்டுப்பாடு உறுதி.