ஹின்ட்ராப் தலைவர்கள் விடுதலை இல்லை - மலேசிய அரசு
டெல்லி: மலேசிய சிறையில் வாடி வரும் ஹின்ட்ராப் அமைப்பின் தலைவர்களை இப்போதைக்கு விடுவிக்கும் எண்ணம் இல்லை என்று மலேசிய அரசு கூறியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழுவின் சார்பில் மிகப் பிரமாண்டமான போராட்டம் நடந்தது.
இந்தியர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தை மலேசிய போலீஸார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி ஒடுக்கினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹின்ட்ராப் அமைப்பின் நிர்வாகிகள் உதயக்குமார் உள்ளிட்ட நால்வர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழர் அமைப்புகள் கோரி வருகின்றன. ஆனால் மலேசிய அரசு அவர்களது விடுதலை குறித்து இதுவரை முடிவெடுக்காமல் உள்ளது.
இந்த நிலையில் டெல்லி வந்த மலேசிய மனித வளத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கூறுகையில், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் தங்களது விடுதலை கோரி மறு ஆய்வுக் குழுவிடம் விண்ணப்பிக்கலாம்.
அந்தக் குழு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி அவற்றை பரிசீலித்து முடிவெடுக்கும். இந்தக் குழுதான் ஹின்ட்ராப் தலைவர்களின் விடுதலை குறித்தும் முடிவெடுக்கும்.
ஆனால் சமீபத்தில் கூடிய இக்குழு, ஹின்ட்ராப் தலைவர்களின் விடுதலை கோரிக்கையை நிராகரித்து விட்டது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நடக்க இன்னும் 2 மாதங்கள் உள்ளது. அப்போது ஹின்ட்ராப் நிர்வாகிகளின் விடுதலை குறித்து மறு ஆய்வுக் குழு சாதகமாக முடிவெடுத்தால் அவர்களை விடுவிக்க அரசு தயாராகவே உள்ளது என்றார் சுப்ரமணியன்.