முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தலி்ல தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.
இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி முழு ஆறு ஆண்டு காலமும் உமர் அப்துல்லா முதல்வராக இருப்பார். காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி தரப்படுகிறது.
இதையடுத்து இன்று உமர் அப்துல்லா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஜெனரல் சோர்வார் சிங் ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் உமர் அப்துல்லாவுக்கு ஆளுநர் என்.என். வோரா பதவி்பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டார்.
ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இளைய முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் 11வது முதல்வரும் ஆவார்.
துணை முதல்வர் தாரா சந்த்:
துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரா சந்த் பதவியேற்றுக் கொண்டார். இவர் முன்னாள் சபாநாயகர் ஆவார்.