பெசன்ட் நகர் சர்ச்சில் ரூ.1.25 லட்சம் கொள்ளை
சென்னை: சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில், புகுந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்த ரூ. 1.25 லட்சம் பணத்தை திருடியுள்ளார்.
நேற்று அதிகாலை இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ஆலய நிர்வாகிகள் கூறுகையில், புத்தாண்டின்போது பக்தர்கள் கொடுத்த பல்வேறு காணிக்கைகள் இருந்த மரத்தால் ஆன உண்டியலை உடைத்து இந்த திருட்டு நடந்துள்ளது.
திருடிய நபர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள ரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளான். உடல் முழுக்க எண்ணைய் தடவியுள்ள அந்த நபர், ஆலயத்திற்குள் 2.47 மணிக்கு நுழைந்துள்ளான். 3.15 மணி வரை உள்ளே இருந்துள்ளான்.
ஆலயத்திற்கு பின்னால் உள்ள அறையின் மேல் ஜன்னல் வழியாக அவன் உள்ளே நுழைந்துள்ளான்.
இதே இடத்தில்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் திருட்டு நடந்தது. பின்னர் வேறு வழக்கில் அந்த திருடன் சிக்கியபோது, ஆலயத்தில் திருடியதையும் ஒப்புக் கொண்டான்.
அதிகாலை 4.45 மணிக்குத்தான் திருட்டு நடந்தது தெரிய வந்தது. பீட்டர் என்பவர்தான் இதைப் பார்த்துள்ளார். தரையில் சில நாணயங்கள் சிதறிக் கிடந்ததையும், பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு திருட்டு நடந்திருப்பதை அவர் அறிந்தார்.
இதேபோன்ற உண்டியல் சர்ச்சில் நான்கு இடங்களில் உள்ளன. இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பாதிரியார் பிரான்சிஸ் மைக்கேல் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் துணை ஆணையர் ஸ்ரீதர் கூறுகையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சர்ச்சில் அமைக்கப்பட்டுள்ள 16 ரகசியக் கேமராக்களின் பதிவுகளையம் தரும்படி கேட்டுள்ளோம்.
குற்றவாளி குறித்த தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதாலும், அவனது உருவம் தெளிவாக பதிவாகியிருப்பதாலும் விரைவில் அவனைப் பிடித்து விடுவோம் என்றார்.