ஓட்டுக்காக விஜய்காந்த் தரும் வேட்டி-சேலை: சரத்
தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்நாபனுக்காக அக் கட்சியின் தலைவர் சரத்குமார் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
திருமங்கலம் தொகுதியில் பண பட்டுவாடா, தேர்தல் முறைகேடு என்று ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் பிரசாரத்திற்காக 4 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
ஆனால் திமுக தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருகின்றன.
விஜயகாந்த் கட்சியினரும் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, பணம் கொடுப்பதாக தகவல் வந்திருக்கிறது. மற்றவர்கள் பணம் கொடுப்பதை எதிர்க்கும் விஜயகாந்த், மட்டும் இப்படி வழங்கலாமா?
எங்களது இலக்கு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே உள்ளது. இதற்காக ஜனவரி 21ம் தேதி முதல் ராதிகாவும், நானும் 100 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறோம். ஒத்த கருத்துள்ள கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம்.
தேவர் சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்த நாங்கள் அனுமதி கேட்டோம். அதற்கு தர மறுத்த காவல் துறையினர் இன்று அதே இடத்தில் திமுகவுக்கு பிரச்சார மேடை ஒன்றை ரோட்டை மறித்து அமைப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர்.
ரூ. 100 கோடியை இறைத்துள்ளனர்...:
நாங்கள் போட்ட கணக்குப்படி சுமார் ஒரு லட்சம்
வாக்காளர்களுக்கு திராவிட கட்சிகள் ரூ. 100 கோடி வரை
கொடுத்துள்ளனர். இதையே இந்த தொகுதிக்கு செலவழித்திருந்தால் போக்குவரத்து, சுகாதார வசதி நீண்ட நாட்களாக இப்பகுதி மக்கள் கேட்டு வரும் மேம்பால திட்டம் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.
திராவிட இயக்கங்கள் மாற வேண்டும். பதவிக்காக திமுக ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று எங்கள் தொண்டர்களின் சார்பாகவும், கட்சியின் சார்பாகவும் பத்திரிகையாளர்களாகிய உங்கள் முன் வைக்கிறோம் என்றார்.
நல்லாட்சி நடக்கிறது...தங்கபாலு:
திமுக வேட்பாளர் லதா அதியமானுக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு உச்சபட்டி, கப்பலூர், திருமங்கலம் செங்கப்படை உள்பட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலும் தமிழகத்தில் கருணாநிதி தலைமைலயிலும் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது.
கருணாநிதியின் சாதனைகளை எதிர்க்கட்சிகளும் கூட மறைக்க முடியாது, மறுக்க முடியாது. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே மலரும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவோடு கருணாநிதியே முதல்வராக நீடிப்பார். இதில் சந்தேகம் வேண்டாம் என்றார்.
சுவிட்டை அழுத்துங்கள்..வைகோ:
அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்துக்கு ஆதரவாக கரிசல்பட்டி, சிவரக்கோட்டை, எஸ்.பி.நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:
இடைத் தேர்தலையொட்டி திமுக அமைச்சர்கள் திருமங்கலம் தொகுதியில் முகாமிட்டு ஓட்டு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மூட்டை, மூட்டையாக மக்களுக்கு பணம் வழங்கி வருகிறார்கள்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக மின்வெட்டால் விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டபோது மக்களை சந்திக்க அமைச்சர்கள் ஏன் வரவில்லை?. ஆனால் தற்போது மட்டும் வீடு வீடாக, தெருத் தெருவாக அமைச்சர்கள் வந்து ண்டிருக்கிறார்கள்.
பணத்தை கொடுத்து எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பண பலத்திற்கு மக்கள் நிச்சயமாக துணை போக மாட்டார்கள்.
சுவிட்சை போட்டால் மின் விளக்கு எரியும். ஆனால் அவர்கள் பவர் கட் செய்வதால் விளக்கு எரிவதில்லை. ஆனால் நீங்கள் வாக்குப்பதிவின்போது ஓட்டு எந்திரத்தில் இரட்டை இலை சின்னத்தை அழுத்தினால் அவர்களது பவரை கட் செய்து விடலாம்.
ஓட்டு இயந்திரத்தில் நீங்கள் பதிவு செய்யும் வாக்கு உங்களுக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும். ஆனால் வாக்குச்சாவடியில் காமிரா இருக்கிறது, யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கண்டுபிடித்து விடுவோம் என்று சிலர் மிரட்டுவார்கள். அதற்கு நீங்கள் பயப்பட வேண்டாம். உங்கள் வாக்கு ரகசியமானது என்றார் வைகோ.