ஓபாமாவுக்கு வீடு காலியில்லை-ஹோட்டலில் தங்கல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியை ஏற்கவுள்ள பாரக் ஓபாமா, தனது குடும்பத்தினருடன் வாஷிங்டன் வந்து சேர்ந்துள்ளார். ஆனால் அதிபர் பதவியை ஏற்கவுள்ளவர்கள் தங்கும் பிளேர் இல்லம் காலியாக இல்லாததால், அவர் தற்காலிகமாக ஹோட்டலில் தங்குகிறார்.
ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக பாரக் ஓபாமா பதவியேற்கவுள்ளார். இதையொட்டி சொந்த ஊரான சிகாகோவிலிருந்து தனது மனைவி மிட்சல் ஓபாமா, மகள்கள் மலியா (10), சாஷா ஓபாமா (7) ஆகியோருடன் வாஷிங்டன் வந்து சேர்ந்துள்ளார்.
இன்று முதல் மலியாவும், சாஷாவும், வாஷிங்டனிலுள்ள புதிய பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஓபாமாவும், குடும்பத்தினரும் ஹே ஆடம்ஸ் ஹோட்டலில் தங்குகின்றனர். வழக்கமாக அதிபர் பதவியேற்கவுள்ளவர்கள், தற்காலிகமாக பிளேர் இல்லம் என்ற இருப்பிடத்தில்தான் தங்குவார்கள்.
ஆனால் தற்போது பிளேர் இல்லம் காலியாக இல்லை. எனவே ஓபாமா குடும்பத்தினரால் அங்கு தங்க முடியவில்லை. இன்னும் சிலநாட்கள் கழித்துதான் அந்த இல்லம் கிடைக்கும். எனவே அதுவரை ஓபாமா குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கவுள்ளனர்.
முன்னதாக சிகாகோவிலிருந்து ஓபாமா குடும்பத்தினருடன் கிளம்பியபோது அவருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சொந்த வீட்டை விட்டு கிளம்பியது என்னை பலவித உணர்வுகளில் மூழ்கடித்தது.
நாங்கள் இல்லாமல் வீடு காலியாக இருப்பதை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் இதைத் தவிர்க்க முடியாதே என்றார்.
இன்று செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் மூத்த ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் ஓபாமா ஆலோசனை நடத்தவுள்ளார்.
பின்னர் செனட் சபை சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹாரி ரீட் ஆகியோரையும் ஓபாமா சந்தித்துப் பேசவுள்ளார்.