விழுந்து எழுந்த பங்குச் சந்தை!
மும்பை: துவக்க நேர இழப்புகளை சரி செய்து கொண்ட இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் இப்போது சிவப்பிலிருந்து பச்சைக்குத் தாவியுள்ளது.
இன்று வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்துக்குள் சென்செக்ஸ் 80 புள்ளிகள் வரை இழந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே இழந்த புள்ளிகளைத் திரும்பப் பெற்றது. இப்போது 78 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 10353.91-ஆக உள்ளது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியின் குறியீட்டெண்ணிலும் இன்று 10 புள்ளிகள் கூடியுள்ளது. பிற்பகல் 1.30 நிலவரப்படி 3130-ஆக இருந்தது நிப்டி.
கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய அரசு அளித்த நிதிச் சலுகைகளுக்குப் பின் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது பங்குச் சந்தை.
இந்த நேரத்தில், இந்திய பங்குகளில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள், மீண்டும் தங்கள் முதலீடுகளைப் புதுப்பிக்க ஆரம்பித்துள்ளனர். நேற்று மட்டும் ரூ.469 கோடி மதிப்புள்ள பங்குகளை அவர்கள் புதுப்பித்தனர். இது இந்திய பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே சந்தையில் சாதகமான போக்கு தொடர வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர், பங்கு வர்த்தகர்கள்.